அம்பாறை மாவட்டத்தின் காவலன் அமரர் வேல்முருகு ஆசிரியரின் 38 ஆவது நினைவு நாள் அனுஷ்டிப்பு!
அம்பாறை மாவட்டத்தின் காவலனாக தமிழ்த் தேசியத்தின் தூணாக நின்ற கல்முனை பாண்டிருப்பைச் சேர்ந்த தமிழ்த் தேசியப் பற்றாளர் அமரர் ஆ. கந்தையா (வேல்முருகு ஆசிரியர்) அவர்களின் 38 வது நினைவு தினம் நேற்று அவருடைய சொந்த கிராமமான பாண்டிருப்பு மண்ணில் அவரது மனைவி, மகள் தமிழ்ச்செல்வி மற்றும் பேரப்பிள்ளைகளின் ஏற்பாட்டில் “வளைகுடா வானம்பாடிகள் சமூகநல மேம்பாட்டு அமைப்பின் ஒருங்கமைப்பில்” அதன் மாவட்ட பொறுப்பாளர் மனித உரிமை செயற்பாட்டாளர் தாமோதரம் பிரதிபனின் தலைமையில் இடம்பெற்றது.
1988.03.20 ம் திகதி ஒட்டுக்குழுக்களால் சுட்டுக்கொல்லப்பட்ட இவர் இந்த மாவட்ட மக்களின் காவலனாகப் பல களங்களிலும் நின்று செயற்பட்ட பற்றாளர். இவரது 38 வது நினைவுநாள் அஞ்சலி நிகழ்வு நேற்று (20)காலை 10 மணியளவில் பாண்டிருப்பு கடற்கரை வீதியில் அமைந்திருக்கின்ற மகாவிஷ்ணு ஆலயத்தில் பூஜை வழிபாடுகளுடன்ஆரம்பமாகி அன்னாரது திருவுருவப் படத்திற்கு மலர் அஞ்சலி செய்யப்பட்டு ஈகைச் சுடரும் ஏற்றப்பட்டது.
இந்நிகழ்வில் அவரது மனைவி முதலாவது சுடரை ஏற்ற அதனைத் தொடர்ந்து முன்னாள் மாகாண சபை உறுப்பினர் மு.இராஜேஸ்வரன் மற்றும் மனித உரிமை செயற்பாட்டாளர் தாமோதரம் பிரதீபன் அன்னாரது உறவினர்கள் பொதுமக்கள் என பலரும் கலந்துகொண்டு மலர் தூவி அஞ்சலி செய்து சுடர் ஏற்றி அக வணக்கம் செலுத்தினர்.
இங்கு இவரது சேவைகள் பற்றி முன்னாள் மாகாணசபை உறுப்பினர் மு.இராஜேஸ்வரன்,மனித உரிமை செயற்பாட்டாளர் தாமோதரம் பிரதீவன் மற்றும் அன்னாரது உறவுகள் பிரதேச பொதுமக்கள் என பலரும் கருத்து வெளியிட்டதோடு அவரது பெயரில் உள்ள சிறுவர் பூங்கா மறுசீரமைப்பு செய்யப்படும் எனவும்,அவரது பெயரில் மாவட்டத்தில் சில கல்வி அபிவிருத்திப் பணிகளும்,இடம்பெறும் எனவும், விரைவில் அவரது திருவுருவச் சிலை நிறுவும் பணி இடம்பெறும் எனவும், அவரது வாழ்வியல் பற்றிய வரலாற்று ஆய்வு நூல் வெளியிடப்படும் எனவும் கூறப்பட்டதோடு இன்றைய தினம் ஆலயத்தில் அன்னதான நிகழ்வும் இடம்பெற்றதுடன் மட்டக்களப்பு மயிலம்பாவெளி வாழும்கலை ஆசிரமம் மற்றும் திருப்பழுகாமம் விபுலாந்தா சிறுவர் இல்லத்திலும் உணவு வழங்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.















