கல்முனை தலைமையக பொலிஸ் நிலைய விஷேட இப்தார் நோன்பு திறக்கும் நிகழ்வு

மஹ்மூத் மாஜித் என்ற இளம் தொழிலதிபரின் முன்மாதிரி

பாறுக் ஷிஹான்

இனங்களுக்கிடையிலான சகவாழ்வு, நல்லிணக்கத்தையும் கட்டியெழுப்பும் நோக்கில்  கல்முனை தலைமையக பொலிஸ் நிலையம் வருடாந்தம் நடாத்தும் 2026 ஆண்டிற்கான இப்தார் நோன்பு திறக்கும் நிகழ்வு நேற்றைய தினம் (18)    மாலை பொலிஸ் நிலைய திறந்த வெளியரங்கில் கல்முனை தலைமையக பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி கே.ஏ.எல்.லசந்த களுஆராச்சி தலைமையில்  கோலாகலமாக   நடைபெற்றது.

இதன் போது நிகழ்வின்  பிரதம விருந்தினராக   அம்பாறை மாவட்ட பிரதி பொலிஸ் மா அதிபர் சுஜித் வேதமுல்ல,அம்பாறை மாவட்ட பொலிஸ் அத்தியட்சகர்  பிரியந்த பண்டார கஸ்தூரி ஆராச்சி ,  உதவி பொலிஸ் அத்தியட்சகர்கள், பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரிகள்,இராணுவ , கடற்படை அதிகாரிகள்  பொலிஸ் பரிசோதகர்கள், பொலிஸ் உத்தியோகத்தர்கள் , உட்பட சர்வமத தலைவர்கள், மற்றும்  கிராம சேவை உத்தியோகத்தர்கள், அபிவிருத்தி உத்தியோகத்தர்கள் மற்றும் சிவில் பாதுகாப்பு குழு அங்கத்தவர்கள் பலரும் கலந்து கொண்டனர் .

அத்துடன் இந்நிகழ்வு   இஸ்லாமிய மார்க்க சொற்பொழிவுடன் நிகழ்வு ஆரம்பமானது.

இதன் போது அதிகளவான மக்கள் கலந்து கொண்டதுடன் நிகழ்வின் நன்றி உரையினை சமூக பொலிஸ் பிரிவின் பொறுப்பதிகாரி பிரதான பொலிஸ் பரிசோதகர் ஏ.எல்.எம் வாஹிட் மேற்கொண்டார்.

 பொலிஸாரினால் ஏற்பாடு செய்யப்பட்ட சிறப்பு ரமழான் நிகழ்வில் கலந்து கொள்வதற்காக வந்திருந்த அம்பாறை மாவட்ட பிரதி பொலிஸ் மா அதிபர் சுஜித் வேதமுல்ல அங்கிருந்த மக்களிடம் சிநேகபூர்வமான கலந்துரையாடலை மேற்கொண்டதுடன் குறை நிறைகளை கேட்டறிந்து கொண்டார்.

இது தவிர பொலிஸாரின் பூரண அனுசரணையுடன் பிரபல சமூக சேவகரும்  இளம் தொழிலதிபருமான  மஹ்மூத் மாஜித் ஏற்பாட்டில் தனது 13 வயதில் நீரிழிவு நோயினால் பாதிக்கப்பட்டு அதற்கான சிகிச்சைகளை  மேற்கொண்டு வந்த நிலையில் தற்போது 2 சிறுநீரகங்களும் பாதிக்கப்பட்டு இன்னும் 4 நாட்களில்   சிறுநீரக மாற்று அறுவை சிகிச்சை மேற்கொள்ள  உதவி கோரிய மருதமுனை பகுதியை சேர்ந்த 33 வயதுடைய தாய் தந்தையரை இழந்து திருமணம் முடிக்காத பர்ஜீஸ்(யாழ் பல்கலைக்கழக பட்டதாரி)  என்ற பெண்ணிற்கு   1 லட்சம் ரூபாய் வழங்கி வைக்கப்பட்டது.அத்துடன் குறித்த சிகிச்சைக்கு ரூபா 80 லட்சம் செலவாகும் என கணிக்கப்பட்டுள்ள நிலையில் மஹ்மூத் மாஜித் மற்றும் அவரது பாரியார் கெய்சர் ஹம்தா ஆகியோரின் தனிப்பட்ட நிதியிலிருந்து இத்தொகை வழங்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

அத்துடன் அம்பாறை மாவட்ட பிரதி பொலிஸ் மா அதிபர் சுஜித் வேதமுல்ல பொன்னாடை போர்த்தி நினைவுச்சின்னம் வழங்கி  கௌரவிக்கப்பட்டுள்ளார்.இதன் போது அம்பாறை மாவட்ட பிரதி பொலிஸ் மா   அதிபருக்கு இன நல்லிணக்கம், பொதுமக்கள் தொடர்பாடல், போதைப்பொருள் ஒழிப்பு உள்ளிட்ட செயற்பாடுகளை சிறப்பாக மேற்கொண்டமைக்காக அம்பாறை மாவட்ட காணி மத்தியஸ்த சபையின் பிரதம மத்தியஸ்தரும் கல்முனை தலைமையக  பொலிஸ் ஆலோசனை குழுவின் பொதுச் செயலாளருமான எம்.ஐ .எம் ஜிப்ரி(எல்.எல்.பி) உள்ளிட்ட  பொலிஸ் ஆலோசனை குழு  உறுப்பினர்களால் பொன்னாடை போர்த்தி கௌரவிக்கப்பட்டார்.

மேலும்,     அம்பாறை மாவட்ட சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர்    ,கல்முனை தலைமையக பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி  ,உள்ளிட்ட பொறுப்பதிகாரிகளுடன் பொதுமக்களின் பாதுகாப்பு நிலைமைகள் தொடர்பாக கேட்டறிந்து பல்வேறு ஆலோசனைகளை வழங்கியமை குறிப்பிடத்தக்கது.இன, மத வேறுபாடுகளை கடந்து சமூகங்களுக்கிடையிலான புரிந்துணர்வை மேம்படுத்தும் ஒரு சிறந்த தளமாக இந்த நிகழ்வு அமைந்திருந்தது.