நாட்டின் நன்மை கருதி வேலோடுமலையில் நள்ளிரவில் சிறப்பாக இடம்பெற்ற சத்ரு சம்ஹார வேள்வி யாகம்!
( வேலோடுமலையிலிருந்து வி.ரி.சகாதேவராஜா)
நாட்டின் நன்மை கருதி, இலங்கையில் சித்தர்களின் ஆதி இருப்பிடம் எனக் கூறப்படும் மட்டக்களப்பு சித்தாண்டி வேலோடு மலை முருகன் ஆலயத்தில், இந்த உலகை ஆளுகின்ற 210 சித்தர்களை பூஜிக்க நேற்று செவ்வாய்க்கிழமை (20/01/2026) அன்று நள்ளிரவில் சத்ரு சம்ஹார வேள்வி யாகம் ஆரம்பமாகி இன்று அதிகாலை வரை இடம்பெற்றது.
சித்தர்கள் குரல் அமைப்பின் ஆஸ்தான தலைவர் சிவசங்கர் ஜீ தலைமையில், நமசிவாய மகேஸ்வரன் சுவாமிகளின் முன்னிலையில் இன்று (21) புதன்கிழமை அதிகாலை மூன்று மணி வரை யாகம் தியானம் உணர்வுபூர்வமாக நடைபெற்றது.
நிகழ்வில் உலகப்புகழ் பெற்ற சாதனைத் தமிழன் ஈழ நல்லூர் நாதஸ்வரச் சக்கரவர்த்தி பாலமுருகன் குழுவினரும் சித்தர்களின் குரல் அன்பர்களுடன் கலந்து கொண்டார்கள்.
நேற்று மாலை மூலிகை குளியலுடன் ஆரம்பமாகி, வனபோஜனம், 18 சித்தர்கள் சந்நிதியில் சர்வ வல்லமை வாய்ந்த 210 சித்தர்கள் வேள்வி, வேல் பூஜை மற்றும் இரவு முழுவதும் “தபஸ்” என்னும் உயர்ந்த ஆழ்நிலை தியானங்கள் இடம் பெற்றன.
வேலோடுமலை தேவஸ்தான ஆதீனகர்த்தா தியாகராஜ சுவாமிகளின் அழைப்பில்
சித்தர்களின் குரல் அமைப்பின் தலைவர் ஆதித்தன், துணைத்தலைவர் மனோகரன், சித்தர்களின் குரல் ஆஸ்தான ஊடகவியலாளர் விபுலமாமணி சகாதேவராஜா ஆகியோரின் ஒழுங்கமைப்பில் நூற்றுக்கணக்கான பக்தர்கள் சகிதம் மிக மிகச்சிறப்பாக இந் நிகழ்வு நடைபெற்றது.
