நாளை [25]  அதிகாலை திருப்பள்ளி எழுச்சி திருவெம்பாவை ஊர்வலம் ஆரம்பம்….

(வி.ரி. சகாதேவராஜா)

வருடாவருடம் இடம்பெற்று வரும் இந்துக்களின்  திருப்பள்ளி எழுச்சி திருவெம்பாவை ஊர்வலமானது இம்முறையும் சிறப்பான முறையில் நாளை (25)  வியாழக்கிழமை அதிகாலை ஆரம்பமாகின்றது.

சிவனை நினைந்து வழிபடும் இவ்விரதம்   நாளை 25.12.2025ஆம் திகதி  வியாழக்கிழமை அதிகாலை ஆரம்பமாகின்றது. தொடர்ந்து 10தினங்கள்  திருவெம்பாவை ஊர்வல நிகழ்வுகள் ஆலய பூஜைகள் இடம்பெறவுள்ளன. 

இக்காலகட்டத்தில்   பிரம்ம முகூர்த்த வேளையாம் அதிகாலை வேளையில் ஆலய வழிபாட்டில் ஈடுபடுவதுடன் இவ் ஊர்வலத்திலும் கலந்து கொண்டு எல்லாம் வல்ல நடராஜப் பெருமானின் அருளைப் பெறுவது இந்துக்களின் வழமையான செயற்பாடாகும்.

காரைதீவுஇந்து சமயவிருத்திச்சங்கம் வருடாவருடம் நடாத்திவரும்  திருப்பள்ளி எழுச்சி ஊர்வலமானது நாளை அதிகாலை 4.00 மணியளவில் ஸ்ரீ கண்ணகை அம்மன் ஆலயத்தில் இருந்து ஆரம்பமாகும்.

தொடர்ந்து பத்து நாட்கள் அதிகாலை ஊர்வலம் மற்றும் ஆலய சிறப்பு பூஜை வழிபாட்டுடன் நடைபெறும். அதேவேளை மாணிக்கவாசக சுவாமிகள் அருளிய திருவாசக முற்றோதலும் இடம்பெறும்.

ஜனவரி மாதம் 03ஆம் திகதி சனிக்கிழமை திருவாதிரை அதாவது ஆருத்ரா தரிசனத்துடன் இவ்விரதம் நிறைவடையும்.