இனமதபேதம் கடந்து குடிநீர் வழங்க உதவிய காரைதீவு பிரதேச சபைக்கு நன்றிகள்!
சம்மாந்துறை பிரதேச சபை தவிசாளர் மாஹிர்
( வி.ரி.சகாதேவராஜா)
சம்மாந்துறை பிராந்தியத்திலும் கல்முனையின் சில பொது இடங்களுக்கும் மற்றும் மஜீட்புரம் வளத்தாபிட்டி மல்வத்தை போன்ற பகுதிளுக்கு குடிநீர் வழங்க உதவி செய்த காரைதீவு பிரதேச சபைக்கு மனமார்ந்த நன்றிகளை தெரிவித்துக்கொள்கிறோம் .
இவ்வாறு சம்மாந்துறை பிரதேச சபையின் தவிசாளர் ஐ.எல்.எம்.மாஹிர் நேற்று நமது நிருபரிடம் தெரிவித்தார் .
அவர் மேலும் தெரிவிக்கையில்..
சம்மாந்துறைப் பிரதேசம் பாரிய ஒரு பிரதேசமாகும். எமது இரண்டு பவுசர்களால் அத்தனை பகுதிகளுக்கும் குடிநீர் வழங்க முடியாது.
சம்மாந்துறையின் மேட்டுநிலபகுதிகளுக்கு குடிநீர் விநியோகம் மின்சாரமில்லாத இன்றைய நிலையில் போகாது.
சம்மாந்துறை ஆதாரவைத்தியசாலை, போலீஸ் நிலையம், தென்கிழக்கு பல்கலைக்கழக கணித பீடம் மற்றும் கல்முனை அஷ்ரப் ஆதார வைத்தியசாலை போன்ற இடங்களுக்கு குடிநீரை வழங்கி வருகிறோம் .
அதற்கு இனமதபேதம் பாராமல் எமக்கு உரிய வேளையிலே பௌசர்கள் மற்றும் மனித வளத்தை தந்து உதவிய காரைதீவு பிரதேச சபைக்கு நன்றிகளை தெரிவித்துக் கொள்கின்றோம். என்றார்.






