சர்வதேச ஆசிரியர் மற்றும் சிறுவர் தின விழா களைகட்டியது!
(வி.ரி.சகாதேவராஜா)
சம்மாந்துறை வலயத்துக்குட்பட்ட அன்னமலை ஸ்ரீ சக்தி வித்யாலயத்தின் சர்வதேச ஆசிரியர் தினவிழாவும் சர்வதேச சிறுவர் தின விழாவும் பாடசாலை அதிபர் பொன். பாரதிதாசன் தலைமையில் நேற்று (23) வியாழக்கிழமை பெரும் ஊர்வலத்துடன் மிக சிறப்பாக நடைபெற்றது.
பிரதம அதிதியாக சம்மாந்துறை வலயக்கல்விப் பணிப்பாளர் எஸ். மகேந்திரகுமார் கலந்து சிறப்பித்தார்.
கௌரவ அதிதிகளாக பிரதிக் கல்விப் பணிப்பாளர் எச்.நைரூஸ்கான், ஓய்வு நிலை உதவிக் கல்விப் பணிப்பாளர் விபுலமாமணி வித்தகர் வி.ரி.சகாதேவராஜா மற்றும் ஆசிரிய ஆலோசகர் ஜி.குணரத்ன ஆகியோர் கலந்து சிறப்பித்தனர்.
முன்னதாகமாணவர்கள் பெற்றோர்கள் இணைந்து பாரிய வர்ண ஊர்வலம் பாடசாலையில் தொடங்கி பிரதான வீதி வரை சென்று மீண்டும் பாடசாலையை டிஜே இசை முழங்க இடம் பெற்றது. மொத்தத்தில் அன்னமலை அதிர்ந்தது.
பின்னர் மாணவர்கள் பெற்றோர்கள் இணைந்து பிரதம அதிதி மற்றும் அதிபர் ஆசிரியர்களை மாலை சூட்டி வரவேற்றார்கள்.
மாணவர்களின் கலை ஆற்றுகைகள் அங்கே பெற்றோர்களின் உதவியுடன் நிறைய வெளிப்பட்டது . அதற்கு அணி சேர்த்தால் போல் ஆசிரியர்களின் ஆற்றுகைகளும் இடம்பெற்றன.
பாடசாலை அபிவிருத்திச் சங்க செயலாளர் திருமதி காஞ்சனா சிவகாந்தன் தலைமையிலான பெற்றோர்கள் குழு மற்றும் கல்விச் சமூகம் முன்னெடுத்த இவ் விழாவில் பிரதமஅதிதி மற்றும் ஆசிரியர்கள் பாராட்டப்பட்டார்கள்.

















