பிரதேசசபை மீண்டும் தமிழரசு வசம்!

மு.கா.ஆதரவு;தவிசாளராக பாஸ்கரன்; உபதவிசாளராக இஸ்மாயில் தெரிவு.!

(வி.ரி. சகாதேவராஜா)

காரைதீவுப்பிரதேசபையின்  தவிசாளர் உதவித் தவிசாளர் தெரிவுக் கூட்டத்தின்போது தவிசாளராக இலங்கை தமிழரசுக்கட்சி உறுப்பினர்சுப்பிரமணியம் பாஸ்கரன் தவிசாளராக தெரிவுசெய்யப்பட்டுள்ளார்.

அதன்படி காரைதீவு பிரதேசசபையின் 4வது தேர்தலில் 5வது தவிசாளராக சு.பாஸ்கரன் 8 வாக்குகளை பெற்று தெரிவாகியுள்ளார்.

உபதவிசாளராக ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் மூத்த உறுப்பினர் எ.எச்.எம்.இஸ்மாயில் பகிரங்கவாக்களிப்பின் மூலம் ஏகமனதாக தெரிவுசெய்யப்பட்டுள்ளார்.

இம்முதல் தெரிவுக் கூட்டம் இன்று (25)  புதன்கிழமை பிப.02.30மணிக்கு கிழக்கு மாகாண உள்ளுராட்சி ஆணையாளர் ஏ.எல்.எம்.அஸ்மி  தலைமையில் சபா மண்டபத்தில் நடைபெற்றது.

காரைதீவுப்பிரதேசசபைக்காக நடைபெற்ற 4வது தேர்தலின்மூலம் தெரிவான 11 உறுப்பினர்களிடையே இத்தெரிவு நடைபெற்றது.  சரியாக ஒரு மணிநேரம் இத்தெரிவு நடைபெற்றது.

மூலாசனத்தில் ஆணையாளர் அஸ்மியும் அருகில் சபைச்செயலாளர் அ.சுந்தரகுமாரும் வீற்றிருந்தனர்.

தவிசாளர் தெரிவுக்காக இரகசிய வாக்கெடுப்பா பகிரங்க வாக்கெடுப்பா என்ற விவாதத்தில் சுமார் அரைமணி நேரம் சென்றது.

தவிசாளர் தெரிவு:

தவிசாளரின் பெயரை முன்மொழியுமாறு  ஆணையாளர் அஸ்மி கேட்டுக் கொண்டார்.

அங்கு இலங்கை தமிழரசுக் கட்சியின் உறுப்பினர் சு.பாஸ்கரனின் பெயரை தமிழரசுஉறுப்பினர் கே.ஜெயசிறில் முன்மொழிய மு.கா. உறுப்பினர் இஸ்மாயில் வழிமொழிந்தார் .

மற்றும் தேசிய மக்கள் சக்தியின் உறுப்பினர் திருமதி கிருஷ்ணபிள்ளை செல்வராணியை தேசிய மக்கள் சக்தி உறுப்பினர் அபூபக்கர் பர்ஹாம் முன்மொழிய தேசிய மக்கள் சக்தி உறுப்பினர் சுலஸ்தனா வழிமொழிந்தார்.

அதன்படி தவிசாளர் பதவிக்காக இலங்கை தமிழரசுக் கட்சியின் சு.பாஸ்கரன் மற்றும் தேசிய மக்கள் சக்தியின் கி.செல்வராணி ஆகியோரின் பெயர்கள் முன்மொழியப்பட்டன.

தவிசாளர் தெரிவை பகிரங்க வாக்கெடுப்பு மூலம் நடாத்துவதென சபையிலுள்ள 08உறுப்பினர்கள் விருப்பம்தெரிவித்ததற்கமைவாக பகிரங்க வாக்கெடுப்பு நடாத்தப்பட்டது.

வாக்கெடுப்பின்போது பாஸ்கரன் 08 வாக்குகளைப் பெற்றுக்கொண்டனர். செல்வராணி 02 வாக்குகளை பெற்றார். பர்ஹாம் எதுவும் தெரிவிக்கவில்லை.

அதன்படிகாரைதீவு பிரதேசபையை 4வது  தடவையாகவும் த.தே.கூட்டமைப்பு வெற்றிபெற்று தவிசாளர் பதவியை தக்கவைத்துக்கொண்டது.

பின்பு ஆணையாளர்  அஸ்மி தனது ஆசனத்தை புதிய தவிசாளர் பாஸ்கரனுக்கு வழங்கினார்.அடுத்து உபதவிசாளர் தெரிவு புதிய தவிசாளரின் அனுமதியுடன் ஆணையாளர் தலைமையில் நடைபெற்றது.

உபதவிசாளர் தெரிவு:

உபதவிசாளருக்கான பெயராக எம்.எச்.எம்.இஸ்மாயில்  முன்மொழியப்பட்டது. வேறு முன்மொழியப்படாமையினால் இஸ்மாயீல் உபதவிசாளராகத் தெரிவுசெய்யப்பட்டார்.

கடந்த முதல் இரண்டு சபைகளிலும் உபதவிசாளராக த.வி.கூட்டமைப்பின் உறுப்பினர்கள் தெரிவாகியிருக்க 3 வது சபையில் ஸ்ரீலங்கா சுதந்திரக்கட்சி உறுப்பினர் ஜாகீர் முதற்றடவையாகத் தெரிவாகியிருந்தார். இந்த 4 வது சபையில் இஸ்மாயில் தெரிவானார்.

அத்துடன் சபை அமர்வு நிறைவுபெற்றது. சபா மண்டபத்தினுள் குறிப்பிட்ட பிரமுகர்களை மட்டும் அனுமதித்து பூட்டிவிட்டனர். ஏராளமான பொதுமக்கள் ஆதரவாளர்கள் மண்டபத்திற்கு வெளியே திரண்டிருந்தனர்.

அரசியல்  பிரமுகர்கள்!

இம் முதலாவது அமர்விற்கு தமிழரசுக்கட்சியின் அம்பாறை மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் கவி.கோடீஸ்வரன் மு.கா பாராளுமன்ற உறுப்பினர் எம்எஸ்.உதுமாலெவ்வை  அ.இ.ம.காங்கிரஸ் பாராளுமன்ற உறுப்பினர் தாஹிர் சம்மாந்துறை மாஹிர் நர்மதா போன்ற அரசியல் பிரமுகர்களும் சபா மண்டபத்தில் சமுகமளித்திருந்தனர்.

சபைக்குவெளியே பாதுகாப்பிற்காக பொலிசாரும் நிறுத்தப்பட்டிருந்ததைக் காணமுடிந்தது..

நடைபெற்ற உள்ளூராட்சி தேர்தலில் அம்பாறை மாவட்ட காரைதீவு பிரதேச சபைக்கான தேர்தலில் இலங்கைத் தமிழரசுக் கட்சி சார்பில் 

 சுப்பிரமணியம் பாஸ்கரன் ( முன்னாள் உறுப்பினர்) வை.கோபிகாந்( முன்னாள் தவிசாளர்)  சின்னத்தம்பி சிவகுமார் , கிருஷ்ணபிள்ளை ஜெயசிறில்( முன்னாள் தவிசாளர்) ஆகியோரும் மாளிகைக்காடு கிழக்கு வட்டாரத்தில் அபூபக்கர் பர்ஹான்( தேசிய மக்கள் சக்தி)

மாளிகைக்காடு மேற்கு வட்டாரத்தில் எம்.எச்.எம்.இஸ்மாயில்( மு.கா.) (முன்னாள் உறுப்பினர்) மற்றும் மாவடிப்பள்ளி வட்டாரத்தில் ஏஆர்எம்.ஹில்மி( அ.இ.ம.காங்கிரஸ்) ஆகியோர் முதல் பட்டியலில்  தெரிவாகியிருந்தார்கள்.

 சபைக்கு 04 உறுப்பினர்கள் பட்டியல் முறையில் தெரிவானார்கள்.

தேசிய மக்கள் சக்தியின் இரு பெண்கள் கிருஷ்ணபிள்ளை செல்வராணி மற்றும் சவுந்தரம் சுலஸ்தனா மற்றும் மு.கா சார்பில் எம்என்எம்.றனீஸ்( முன்னாள் உறுப்பினர்) மற்றும் சுயேச்சை குழு தலைவர் ஏஎம்.ஜாகீர்( முன்னாள் உப தவிசாளர்) ஆகியோர் தெரிவானார்கள்.

இம்முறை இரண்டு பெண் உறுப்பினர்கள் பட்டியலில் தெரிவானார்கள்.இதற்கு முன்னர் ஒரேயொரு பெண் உறுப்பினர் எஸ்.ஜெயராணி மட்டும் சபையை அலங்கரித்தார் என்பது குறிப்பிடத்தக்கது.