கட்சியின் தீர்மானத்தை நாம் ஏற்கவில்லைஇது தனி நபரின் பழிவாங்கல்காரைதீவு தமிழரசு பிரமுகர்களின் கருத்து 

( வி.ரி. சகாதேவராஜா)

காரைதீவு பிரதேச சபைத் தவிசாளர் தொடர்பாக இலங்கை தமிழரசுக் கட்சி எடுத்திருக்கின்ற தீர்மானத்தை நாம் ஒருபோதும் ஏற்றுக்கொள்ளப்போவதில்லை.

இது தனிப்பட்ட ஒருவரின் தன்னிச்சையான பழிவாங்கல் என்றே கருதுகின்றோம் .

இவ்வாறு இலங்கைத் தமிழரசுக் கட்சியின் காரைதீவு பிரதேச  பிரதிநிதிகள் சிலர் கருத்து கூறினர் .

காரைதீவு பிரதேச சபைக்கு தவிசாளராக முதல் இரு வருடங்கள்  சுப்பிரமணியம் பாஸ்கரனும், அடுத்த இரண்டு வருடங்களுக்கு  கிருஷ்ணபிள்ளை ஜெயசிறிலும் நியமிக்கப்படுவதாக கட்சியால் தீர்மானிக்கப்பட்டுள்ளது என்று இலங்கைத் தமிழரசுக் கட்சியின் பொதுச்செயலாளரும் ஜனாதிபதி சட்டத்தரணியுமான எம்ஏ .சுமந்திரன் அறிவித்திருந்தார்.

அது தொடர்பாக காரைதீவு பிரதேச மக்கள் சார்பாக கட்சியின் பிரதிநிதிகள் சிலர் கருத்து தெரிவித்துள்ளார்கள்.

இலங்கைத் தமிழரசுக் கட்சியின் காரைதீவு பிரதேச சபையின் முன்னாள்  உறுப்பினரும் கட்சியின் காரைதீவு பிரதேச கிளை உறுப்பினருமான த. மோகனதாஸ் கூறுகையில் ..

தேர்தல் முடிந்து 45 நாட்களுக்கு இழுத்தடித்து இன்று  இந்த முடிவை எமது கட்சி அறிவித்து இருக்கின்றது . இம் முடிவையிட்டு அதிர்ச்சி அடைகின்றோம்.

வாக்களித்த மக்கள் ஏமாற்றப்பட்டுள்ளார்கள்.

கட்சியின் தீர்மானத்தை நாம் ஒருபோதும் ஏற்க போவதில்லை .

எமது காரைதீவு மக்கள் ஆகக்கூடிய வாக்குகளை அளித்து ஜெயசிறிலை முதல் தவிசாளர் ஆக்கவே ஆணை வழங்கியது .

அதுமட்டுமல்ல எமது கட்சியின் காரைதீவு பிரதேச மட்ட குழுவும் சேர்ந்து மூன்று தரப்புகளாக கலந்துரையாடி இறுதியில் தவிசாளராக ஜெயசிறிலே வரவேண்டும் என்று தீர்மானத்தை எடுத்து கட்சிக்கு  தெரியப்படுத்தி இருந்தது .

வேட்பாளர்களை தெரிவு செய்து தேடுதல் நடத்தப்படும் வரை பிரதேசமட்ட குழு சிறப்பாக இயங்கியது 

அது மட்டுமல்ல தவிசாளர் யார் என்பதையும் அறிவித்திருந்தது .

 இந்த பணிகளுக்கு எல்லாம் மாவட்ட மற்றும் பிரதேச குழுக்கள் தேவைப்படுகிறது. ஆனால் தவிசாளர் தெரிவு இக் குழுக்கள் தேவையில்லை. இது நியாயமா?

மேலும் களுவாஞ்சிக்குடியில் நடைபெற்ற கூட்டத்திலும் மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் கவிந்திரன் கோடீஸ்வரன் தொடக்கம் அனைவரும் திரு ஜெயசிறிலே தவிசாளராக வரவேண்டும் என கூறினர்.  முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் கலையரசனும் அவ்வாறான கருத்தைக் கொண்டிருந்தார்.

ஆனால் இப்பொழுது எமது பிரதேச மட்டகிளைக்குழுவின் கருத்தை முற்று முழுதாக நிராகரித்து ஒரு தனி நபரின் பழிவாங்கலுக்காக,   தேர்தலில் அதி குறைந்த வாக்குகளை பெற்ற எம்மால் தெரிவு செய்யப்படாத ஒருவருக்கு முதலிரண்டு வருட காலம் தவிசாளர் பதவியை கட்சி வழங்குவது என்பது ஏற்றுக் கொள்ள முடியாது. 

இதை நாங்கள் வன்மையாக கண்டிக்கிறோம் என்றார்.

தமிழரசு கட்சியின் காரைதீவுப்பிரதேச உள்ளூராட்சி வேட்பாளர்களில் ஒருவரான செல்லதம்பி புவனேந்திரன் கூறுகையில் ..

கட்சியின் இந்த தீர்மானத்தை நாங்கள் ஒருபோதும் ஏற்றுக் கொள்ளப் போவதில்லை .

காரைதீவு மக்களின்  ஒட்டுமொத்த ஆணையை  ஒரு தனிநபர் நிராகரித்திருக்கிறார் என்றால் இது ஒரு ஜனநாயக கட்சி எடுக்கின்ற தீர்மானமாக கொள்ளலாமா? உண்மையில் இது கட்சியின் தீர்மானம் அல்ல. மாறாக தனிநபர் முடிவே. 

 சிறிதரனுக்கு ஆதரவு தெரிவித்தார் என்கின்ற ஒரே ஒரு குற்றச்சாட்டை வைத்து செயலாளர் சுமந்திரன் எமது ஜெயசிறிலை பழிவாங்கி இருக்கின்றார் என்றே கருதுகின்றேன் .

இது அம்பாறை மாவட்டத்தில் கட்சியின் எதிர்காலத்தை நிச்சயமாக பாதிக்கும் என்பதனையும் கூறிக் கொள்ள விரும்புகின்றேன் .

நாங்கள் ஒரு போதும் அவரது தன்னிச்சையான தீர்மானத்தை ஏற்றுக் கொள்ளப் போவதில்லை.

கட்சியின்  முன்னாள் பெண் உறுப்பினர் சின்னையா ஜெயராணி கூறுகையில்..

 எந்தக்கட்சி என்றாலும் மக்களின் ஆணைக்கு தலைவணங்க வேண்டும். தனிப்பட்ட ஒருவரின் தன்னிச்சையான பழிவாங்கும் செயற்பாடாகவே இதனை பார்க்கிறேன்.

தேர்தல் முடிந்து 45 நாட்கள் கடந்து தவிசாளர் யார் என்பதை கட்சியை அறிவித்திருக்கின்றமை வேடிக்கையான விடயம். இம் முடிவை காரைதீவு மக்கள் ஒருபோதும் ஏற்றுக்கொள்ள மாட்டார்கள் .என்றார்.