இவ்வாண்டிற்கான கிழக்கு மாகாண மல்யுத்தப் போட்டிகளில் மட்டக்களப்பு மாவட்ட ஆண்கள் அணியினர் சாம்பியனாக தெரிவாகியுள்ளனர்.

கிழக்கு மாகாண மல்யுத்தப் போட்டிகள் திருகோணமலை மக்கேசர் உள்ளக அரங்கில் இடம்பெற்றுள்ளது.

இதில் ஆண்களுக்கான 10 வகையான எடைப்பிரிவுகளின் கீழ் நடாத்தப்பட்ட இந்தப் போட்டிகளில் திருகோணமலை, அம்பாரை மற்றும் மட்டக்களப்பு ஆகிய மாவட்டங்களைச் சேர்ந்த போட்டியாளர்கள் பங்குபற்றியுள்ளனர்.

10 எடைப்பிரிவுகளில் 8 தங்கப்பதக்கங்களையும் 7 வெள்ளிப்பதக்கங்களையும் மட்டக்களப்பு மாவட்ட ஆண்கள் அணியினர் சுவீகரித்துள்ளனர்.

இதன்மூலம் இவ்வருடத்திற்கான கிழக்கு மாகாண மல்யுத்த போட்டிகளில் மட்டக்களப்பு மாவட்ட ஆண்கள் அணியினர் சம்பியனாகியுள்ளனர்.

அதேவேளை பெண்களுக்கான மல்யுத்த போட்டிகளில் இம்முறை முதல்தடவையாக மட்டக்களப்பு மாவட்டத்தின் மண்முனைப்பற்று பிரதேச செயலக பிரிவில் இருந்து மூவர் கலந்து கொண்டுள்ளதுடன், இவர்கள் ஒரு தங்க பதக்கத்தினையும் இரண்டு வெள்ளிப்பதக்கங்களையும் சுவீகரித்துள்ளனர்.

இவர்களின் பயிற்றுவிப்பாளராக வீ.திருச்செல்வம் மற்றும் விளையாட்டு உத்தியோகத்தர் ஏ.சிவகுமார் ஆகியோர் குறித்த போட்டி நிகழ்வுகளில் கலந்துகொண்டிருந்தமையும் குறிப்பிடத்தக்கது.