பாடசாலை மாணவ  மாணவிகள் தலைக்கவசம் அணிந்து பயணிப்பது அவசியம் –கல்முனை தலைமையக  பொலிஸ் நிலைய  பொறுப்பதிகாரி

பாறுக் ஷிஹான்


கல்முனை தலைமையக பொலிஸ் பிரிவிற்குட்பட்ட கல்முனை  வலயக் கல்வி அலுவலகத்திற்குட்பட்ட பாடசாலைக்கு செல்லும் மாணவ  மாணவிகள் தங்களது பாதுகாப்பு கருதி  கட்டாயமாக பாதுகாப்பு தலைகவசம் அணிந்து செல்லுமாறு கல்முனை தலைமையக  பொலிஸ் நிலைய  பொறுப்பதிகாரி  லசந்த களுவாராய்ச்சி  அறிவித்துள்ளார்.

கல்முனை வலயக் கல்வி பணிப்பாளருக்கு இவ்விடயம் தொடர்பில் அவர் அனுப்பி வைத்துள்ள கடிதத்தில் மேற்கண்டவாறு குறிப்பிட்டுள்ளார். பாடசாலைக்கு செல்லும் மாணவ  மாணவிகள் தங்களது பாதுகாப்பு கருதியும் மற்றும் வீதி போக்குவரத்து சட்டங்களை அறிவுறுத்தல் செய்யுமாறும் வேண்டிக் கொள்வதோடு இவ் சட்ட திட்டங்களை மீறும் பட்சத்தில் அவர்களுக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என அதில் மேலும் குறிப்பிட்டுள்ளார்.

அத்துடன் வலயக் கல்வி  அலுவலகத்திற்குட்பட்ட பாடசாலை மாணவ  மாணவிகளை பாடசாலை ஆரம்பத்திலும்  முடிவிலும் ஒரு ஒழுங்குபடுத்தல் செய்து வீதி போக்குவரத்து காப்பாளர்களை நியமிக்குமாறும் மற்றும் பாடசாலை அதிபர்களுக்கு அறிவுறுத்தல் கொடுக்குமாறும் அவர் கேட்டுக்ளார்.

எனினும் வலயக் கல்வி  அலுவலகத்திற்குட்பட்ட பாடசாலை ஆசிரியர்கள் ஒரு சிலர் பாடசாலை வருகின்ற போது தலைக்கவசம் இன்றி மோட்டார் சைக்கிளில் செல்வது அவதானிக்கப்பட்டுள்ளமையும் இங்கு சுட்டிக்காட்டத்தக்கது.