நாம் வீதியால் நடப்பதற்கு கூட  ஒழுங்கு விதிமுறைகள் உள்ளது.
அதேபோல் ஒரு பொது இடத்தில் நடந்து கொள்வதற்கான நாகரிக முறைகளையும் நாம் கடைப்பிடிக்க வேண்டியதும் எமது கடமையாகும். இவ்வாறான ஒழுங்கை மீறிய பார்வையாளர் கல்முனை ஆதார வைத்தியசாலையின் பாதுகாப்பு பிரிவினரின் மேல்முறையீடு காரணமாக கல்முனை பொலிசாரினால் கைது செய்யப்பட்டுள்ளார்.


மேற்படி மன வேதனைக்குரிய விடயம் பற்றி தெரியவருவதாவது,
கல்முனை ஆதார வைத்தியசாலையில் தற்போது பாதுகாப்பு கடமைகளை சரிவர  செய்வதற்கும், நோயாளிகளின் உரிமைகளை பேணுவதற்கும், பாதுகாப்பு உத்தியோகஸ்தர்கள் நன்கு பயிற்றப்பட்டுள்ள நிலையில்,
இன்று (21) காலையில் விடுதி இல 01 ற்கு பார்வையாளராக வந்த ஒருவர் விடுதியில் இருந்தபடியே முன்னனுமதி இன்றி வீடியோ தொடர்பு ஏற்படுத்தி படக்காட்சிகளை காண்பித்தபடி கதைத்துக் கொண்டு இருந்திருக்கிறார்.


இதை  பார்வையுற்ற பாதுகாப்பு உத்தியோகஸ்தர் இந்த விடயம் தவறு எனவும் நோயாளர்களும், பார்வையாளர்களும் உள்ள இடத்தில் வீடியோ காட்சிகளை எடுப்பதும், வெளியிடுவதும் தடை செய்யப்பட்டுள்ளது என்று கூறி அதை நிறுத்துமாறு கேட்டுச் சென்றுள்ளார்.


பின்னர் விடுதிகளின் வேலைகளை முடித்து வரும் வழியில் வைத்தியசாலையின் உள்புறத்தில் வைத்து பாதுகாப்பு உத்தியோகத்தரை காத்திருந்து தாக்கி, அவதூறான வார்த்தை பிரயோகங்களையும் மேற்கொண்டுள்ளார். மிகவும் பயிற்றப்பட்ட பாதுகாப்பு உத்தியோகஸ்தர் அமைதியாகச் சென்று பாதுகாப்பு மேற்பார்வையாளர் ஊடாக முறைப்பாடு செய்யப்பட்டதை அடுத்து வைத்தியசாலை பொலிஸ் பிரிவின் ஊடாக நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு குழப்பம் விளைவித்தவர் கைது செய்யப்பட்டுள்ளார்.


இவ்விடயம் சம்பந்தமாக நிர்வாக தரப்பில் தெரிய வருவதாவது
இவ்வைத்தியசாலை நோயாளர்களுக்கும், சேவையாளருக்கும், பொது மக்களுக்கும் பொதுவானது. இங்கு பொதுமக்களின் சேவை கருதியே  செயற்பாடுகள் நடைபெறுகின்றன. எனவே பார்வைதர வருபவர்கள் வைத்தியசாலையின் ஏனைய நோயாளர்களுக்கும் பொது மக்களுக்கும் இடையூறு இல்லாமல் சட்டத்தையும், பாதுகாப்பையும் உறுதிப்படுத்த வேண்டியது பாதுகாப்பு உத்தியோகஸ்தர்களின் கடமையாகும். அவர்களின் கடமையை செவ்வனே செய்ய ஒத்துழைக்காது தாக்க முற்படுவதும் அவதூறான வார்த்தைகள் பேசுவதும் இருதரப்பிற்குமான சிநேகபூர்வ உறவை தடுக்கும்.எனவே வைத்தியசாலை சட்ட திட்டங்களை மதித்து நிர்வாகத்துக்கு ஒத்துழைக்குமாறு அனைவரையும் கேட்டுக் கொள்வதோடு சிறந்த சேவைக்கு ஒத்துழைப்பு தருமாறும் கேட்டுக்கொள்ளப்பட்டது.