நற்பிட்டிமுனை ஆலயங்களின் பிணக்கு வழக்கு இணக்கப்பாட்டுடன் நிறைவு!
( வி.ரி.சகாதேவராஜா)
நற்பிட்டிமுனை கணேசர் ஆலயத்தில் பாரம்பரிய மரபுவழி வழிபாட்டு முறை பின்பற்றப்படவேண்டும்.வழக்கில் சம்பந்தப்பட்ட இரு திறத்தவர்களிடையே ஏற்படுத்திக் கொள்ளப்பட்ட இணக்கப்பாடுகள் உடன்பாடுகளுகமைவாக இரு சாராரும் செயற்பட வேண்டும்.
இணக்கத்தீர்மானத்தைமீறினால் நீதிமன்ற அவமதிப்பு தொடர்பிலே நடைமுறையில் காணப்படுகின்ற சட்ட ஏற்பாடுகளுக்கு அமைவாக சட்ட நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என்று கட்டளையிடப்பட்டுள்ளது.
இவ்வாறு கல்முனை மேல் நீதிமன்ற நீதிபதி ஜே டிரொஸ்கி முன்னிலையில் வழக்கு முடிவுறுத்தப்பட்டு கட்டளையிடப்பட்டது.
கல்முனை நற்பிட்டிமுனையில் புதிதாக நிருமாணிக்கப்பட்ட பத்ரகாளியம்மன் மற்றும் கணேசர் ஆலயம் முருகன் ஆலயம் தொடர்பாக சுந்தரலிங்கம் சுரேஷ் முதலான ஏழு பேர் ஆணையீட்டெழுத்தாணையை மனுதாரர்கள் ஆகவும் அரசாங்க அதிபர் உள்ளிட்ட 09 பேர் எதிராளி களாகவும் கொண்டு கல்முனை மேல் நீதிமன்றத்திலே இவ் வழக்கு தாக்கல் செய்யப்பட்டிருந்தது.
கல்முனை மேல் நீதிமன்ற நீதிபதி ஜே டிரொஸ்கி முன்னிலையில் இவ் வழக்கு எடுக்கப்பட்டது.
மனுதாரர் சார்பில் சட்டத்தரணிகளான எம் எம் .எ.சுபைர் எஆர்எம். கலீல் பிரதிவாதிகள் சார்பில் சட்டத்தரணிகளான முவாஷம் நதீர் மற்றும் அரச சட்டத்தரணி பிரசாந்தன் ஆகியோர் ஆஜரானார்கள்.
இரு சாராரினதும் இணைக்கப்பாட்டையடுத்து பிணக்கினை சுமுகமாக தீர்த்துக்கொள்ள, அம்பாறை மாவட்ட மேலதிக அரசாங்க அதிபர் சிவ.ஜெகராஜன் தலைமையில் 30.03.2025 இல் நடாத்திய கூட்டத் தீர்மான ஆவணம் மன்றின் பரிசீலனைக்கு சமர்ப்பிக்கப்பட்டது.
மேற்படி நற்பிட்டிமுனை பத்திரகாளி அம்மன் ஆலய நடைமுறை தொடர்பாக விளக்கம் அளிக்கும் கூட்டம் என்ற தலைப்பில் 27.03.2025 இல் கூட்டம் நடத்தப்பட்டு இரு திறத்தாரின் இணக்கப்பாட்டின் படி அதற்கான சமூகமான தீர்வு எட்டப்பட்டிருந்தது.
அதன்படி இரு திறத்தவர்களிடையே ஏற்படுத்தி கொள்ளப்பட்ட இணக்கப்பாடுகள் உடன்பாடுகளுகமைவாக இருசாராரினதும் ஏற்றுக்கொள்ளப்பட்ட திருத்தங்களுடன் வழக்கு முடிவுறுத்தப்பட்டு கட்டளையிடப்பட்டது.
நற்பிட்டிமுனை பத்திரகாளியம்மன் ஆலயம் ஆனது பரிவார ஆலயமாக பேணப்பட வேண்டும். பத்ரகாளியம்மன் ஆலயத் திருப்பணிச்சபையின் செயற்பாடுகள் முடிவுக்கு கொண்டுவரப்படுவதுடன் மேற்படி முருகன் ஆலய நிர்வாகத்தின் ஆளுகைக்குள் அது முழுமையாக நிர்வகிக்கப்படும்.
எதிர்காலத்தில் இவ் ஆலயம் தொடர்பான பூஜைகள் பரிவார மூர்த்திகளுக்கான முறைப்படி செய்யப்பட வேண்டும். குறிப்பாக ஊர் சுற்றுதல் என்பது பிரதான மூர்த்தியான ஸ்ரீ முருகப்பெருமான் வீதி உலாவுடன் மாத்திரமே செய்யப்பட வேண்டும்.
பத்திரகாளி அம்மனுக்கான விசேட வழிபாடுகள்பூசைகள் திருவிழாக்கள் ஆலயத்தில் உள்ளும் உள்வீதி வளாகத்தையண்டிய வெளிவீதி உலா உடன் மேற்கொள்ளப்படலாம். குறிப்பாக நவராத்திரி காலத்தில் இந் நடைமுறை நடைமுறைப்படுத்தப்பட வேண்டும் .ஏற்கனவே அமைக்கப்பட்ட கோவிலுக்கான அனுமதி தொடர்பான பொதுவான அனுமதிகளை சம்பந்தப்பட்ட நிறுவனங்களின் பிராயச்சித்த நடைமுறைகளுக்கு அமைவாக தற்போது ஆலய நிர்வாகத்தை முழுமையாக பொறுப்பேற்க உள்ள முருகன் ஆலய நிர்வாகம் நிறைவேற்றுதல் வேண்டும்.
இது தவிர, சேனைக் குடியிருப்பு பத்திரகாளி அம்பாள் ஆலயத்தின் பூஜை முறைமைகள் நவராத்திரி முதலாவது நாள் தொடக்கம் ஒன்பதாவது நாள் இவ்வாறு நடைபெற வேண்டும் என்று குறிப்பிடப்பட்டுள்ளது.
இறுதி 9ஆவது நாள் சடங்குகளுடன் நடைபெற்று மறுநாள் காலை 7 மணிக்கு கதவு அடைப்பு நடைபெற்று குறித்த பத்ரகாளியம்மன் சிலை சேனைக்குடியிருப்பு பத்ரகாளியம்மன் கோவிலில் இருந்து எடுத்துச் செல்லப்பட்டு நற்பிட்டிமுனை கணேசர் ஆலயத்தில் மீண்டும் உரிய சடங்கு ஆச்சாரங்களுடன் வைக்கப்படுதல் வேண்டும்.
என்று குறிப்பிடப்பட்டுள்ளது.