இலங்கையில் பௌத்த மதம் கொண்டு வரப்பட்ட நாளாக, நினைவு கூரப்படும் பொசன் பண்டிகையை முன்னிட்டு, கல்முனை ஆதார வைத்திய சாலையின் பணிப்பாளர், வைத்திய கலாநிதி சுகுணன் குணசிங்கம் அவர்களின் ஆலோசனைக்கு அமைவாக வைத்தியசாலையின் சேவையாளர்களின் பூரண பங்களிப்புடன், பொசன் விழாக்குழுவினரால் நிகழ்வு ஒழுங்கு செய்யப்பட்டு நடைபெற்றுள்ளது.

பணிப்பாளரினால் ஓர் பொசன் வாழ்த்து மடல் சேவையாளர்களுக்கான குழுக்களில் பகிரப்பட்டுள்ளதன் மூலம் தனது இன சமத்துவ தலைமைத்துவத்தை வெளிப்படுத்தியுமுள்ளார் பணிப்பாளர் வைத்திய கலாநிதி சுகுணன் குணசிங்கம் அவர்கள்.

நிகழ்வில் மங்கள விளக்கேற்றல், மதகுருக்களின் ஆசீயுரையுடன் பொசன் மின் விளக்கு எரியவிடப்பட்டது.

பணிப்பாளரின் விசேட உரையில்,
இலங்கை வரலாற்றில் தேவ நம்பிய திஸ்ஸ மன்னனின் ஆட்சிக் காலத்தில் அரஹத் மஹிந்த தேரரின் வரவோடு முக்கியமான நிகழ்வாக பொசன் திகழ்கின்றது. இது அனைவருக்கும் பொதுவான நிகழ்வாக தற்போது இடம் பெற்றுக் கொண்டு இருக்கின்றது.

எமது வைத்தியசாலையில் பலதரப்பட்ட சேவையாளர்கள் கடமையாற்றுகின்றனர். அனைவரும் ஒரு குழுவாக இயங்குவதன் மூலமே சிறந்த நற்பயனையும், சேவையையும் பெற முடிகின்றது.
அதேபோல் இன மதம் சாதி வேறுபாடு இன்றி அனைவரும் ஒன்று இணைந்து செயலாற்றுவதன் மூலமே நாம் நாட்டில் மகிழ்ச்சியை ஏற்படுத்தலாம்.
இந்த நிகழ்வும் ஒரு சிறப்பு நிகழ்வாக அனைவரின் மனங்களிலும் ஒரு புதிய மாற்றத்தை உண்டு பண்ணி உள்ளது.


நாம் ஒளி விளக்கினை புற வெளியில் ஏற்றுகின்றோம். அதேபோல் எமது மனங்களிலும் உள்ளகமாக ஒளியை ஏற்றுவதன் மூலம் பிரகாசமான வாழ்க்கையை பெற முடியும். என கூறியதுடன், எமது சேவையாளர்கள், மதத் தலைவர்கள், பாதுகாப்பு படையினர், ஏற்பாட்டுக் குழுவினர் அனைவருக்கும் எனது மனமார்ந்த நன்றிகள் எனக் கூறினார்.
இச் சிறப்பு நிகழ்வில் கல்முனை பௌத்த விகாரதிபதி, மெதடிஸ்த சபையின் போதகர் ஆகிய சமய குருக்களும், கல்முனை வைத்தியசாலையின் பொலிஸ் அதிகாரி, கல்முனை கடற்படை முகாம் பொறுப்பதிகாரி, கல்முனை காலால் படை முகாம் பொறுப்பு அதிகாரி, பொது சுகாதார வைத்திய பொறுப்பு அதிகாரி டாக்டர் எஸ் ராஜேந்திரன், திட்டமிடல் பிரிவு வைத்திய பொறுப்பு அதிகாரி திருமதி வினோதினி, தர முகாமைத்துவ பிரிவு பொறுப்பு வைத்திய அதிகாரி டாக்டர் ராகுலன் கணக்காளர் திரு கேந்திர மூர்த்தி நிர்வாக உத்தியோகத்தர் திருமதி குமுதினி ஆகியோருடன் ஏனைய தரப்பு உத்தியோகஸ்தர்களும் கலந்து சிறப்பித்துள்ளனர்.

நேற்றைய நிகழ்வின் (10) தொடராக இன்று (11) காலை 10 மணியளவில் ஏற்பாட்டு குழுவினரால் ஐஸ் கிரீம் தன்சல் (தானம்) வழங்கப்பட்டுள்ளது.