கல்முனை வடக்கு பிரதேச முன்றலில் 18வது நாளாகவும் தொடரும் உரிமை போராட்டம்
(அரவி வேதநாயகம்)
கல்முனை வடக்கு பிரதேச செயலக நிர்வாக நடைமுறைகளுக்கு எதிராக
இழைக்கப்படும் அநீதிகளுக்கு எதிரான மக்கள் போராட்டம் இன்றும் 18வது நாளாகவும் தொடர்கின்றது.

இன்றும் கல்முனை வடக்கு பிரதேச செயலகத்தின் கீழ் வரும் கிராமங்களை பிரதிநிதித்துவப்படுத்துகின்ற மக்கள் காலை முதல் கொழுத்தும் வெயிலையும் பொருட்படுத்தாது வடக்கு பிரதேச முன்றலில் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

தினமும் இந்த போராட்டத்துக்கு வலுவூட்டும் வகையிலே பல்வேறுபட்ட பிரதேசங்களில் இருந்தும் சமூக ஆர்வலர்களும் அரசியல்வாதிகளும்
கலந்து கொள்கின்றமையையும் காணக்கூடியதாக இருக்கின்றது.

இப்போராட்டத்தின் போது உப பிரதேச செயலகமாக மாற்றுவதை நிறுத்து,
அமைச்சின் செயலாளர் அமைச்சரவை தீர்மானத்தை நடைமுறைப்படுத்து, மாவட்ட செயலாளர் அமைச்சரவை தீர்மானத்தை நடைமுறைப்படுத்து, கல்முனை வடக்கு பிரதேச செயலகத்தின் சுயாதீன செயறபாட்டை உறுதிப்படுத்து,
யாருடைய தேவைக்காக பிரதேச செயலகத்தை உப பிரதேச செயலகமாக தரமிறக்க பார்க்கின்றாய், எங்கள் செயலகத்திற்கான நிதி, காணி அதிகாரங்களை வழங்கு, அரசாங்க அதிபரே அமைச்சின் செயலாளரே அமைச்சரவை தீர்மானத்துக்கு எதிரான தீர்மானத்தை எடுக்கும் அதிகாரம் உங்களுக்கு உண்டா?
போன்ற கோஷங்களை எழுப்பியவாறு பொதுமக்கள் தங்களுடைய எதிர்ப்பு நடவடிக்கைகளை தொடர்கின்றமை குறிப்பிடத்தக்கது.