கல்முனை வடக்கு ஆதார வைத்தியசாலையில் கனடா சர்வம் அமைப்பின் (Sarvaam Foundation – Canada) 2 ஆம் வருட பூர்த்தியினையிட்டு நடைபெற்ற நிகழ்வு

கல்முனை வடக்கு ஆதார வைத்தியசாலையில் கனடா சர்வம் அமைப்பின் 2ஆம் வருட பூர்த்தியினை சிறப்பிக்கும் முகமாக கனடா சர்வம் அமைப்பினுடைய ஏற்பாட்டிலும் வைத்தியசாலையின் பணிப்பாளர் வைத்திய கலாநிதி Dr.இரா.முரளீஸ்வரன் அவர்களின் தலைமையிலும் இந்நிகழ்வானது வைத்தியசாலையின் கேட்போர் கூடத்தில் 2024.02.02 ஆம் திகதியன்று மிகச்சிறப்பாக இடம்பெற்றது.

இந்நிகழ்வில் விசேட தேவையுடைய பிள்ளைகளுக்காக சர்வம் அமைப்புடன் இணைந்து தங்களது இலவச பராமரிப்பு சேவையை அவர்களுக்காக அர்ப்பணித்த கல்முனை வடக்கு ஆதார வைத்தியசாலையின் சிறுபிள்ளை வைத்திய நிபுணர் Dr.S.N.ரொஷாந்த், உளநல பிரிவு மருத்துவர் Dr.U.L.சராப்தீன், இயன்மருத்துவப் பிரிவு உத்தியோகத்தர்களான திரு.G.சந்திரகாஷன், திரு.A.ஹொட்ஷன், பேச்சு மற்றும் மொழிச் சிகிச்சை உத்தியோகத்தர் செல்வி.Y.M.U.I. யாபா, தொழில்சார் சிகிச்சை உத்தியோகத்தர் செல்வி.M.T.நஸ்ரின், குழந்தைநல விடுதி வைத்தியர்கள் விசேட பிரிவு ஆசிரியர்கள், காரைதீவு சண்முகா வித்தியாலய அதிபர் மணிமாறன், ஆசிரியை ரோகினி ஆகியோருக்கு மாலை அணிவித்து பொன்னாடை போர்த்தி நினைவுச்சின்னம் வழங்கப்பட்டு கௌரவிப்பும் இடம்பெற்றது.

மேலும் விசேட உரையினை கல்முனை வடக்கு ஆதார வைத்தியசாலையின் பணிப்பாளர் வைத்திய கலாநிதி Dr.இரா.முரளீஸ்வரன் நிகழ்த்தினார். தனது உரையில் இந் நிகழ்வுகள் ஆத்ம திருப்தியை ஏற்படுத்தியதாகவும் இவ்வாறான நிகழ்வுகள் மூலம் சேவையாளர்களை பாராட்டி கௌரவிப்பதில் தான் மகிழ்ச்சியடைவதாகவும் தெரிவித்தார்.

மேலும் இந்நிகழ்வில் சர்வம் அமைப்பின் பிரதிநிதியாக இலங்கையின் நிதி நிருவாகிகளில் ஒருவரான கேமதாசன் கலந்து கொண்டு உரையாற்றினார். அவர் தனது உரையில் சிகிச்சையின் ஆரம்பத்தில் தான் தூக்கிய குழந்தை கஷ்மிதா தற்போது நடந்து வருவது மிகுந்த மகிழ்ச்சியைத் தருவதாக குறிப்பிட்ட அவர் அனைவருக்கும் வாழ்த்துக்களையும் நன்றியையும் தெரிவித்து தனது சிற்றுரையை முடித்துக்கொண்டார்.

தொடர்ந்து விசேட பிரிவு குழந்தைகளின் பாடல், நடன நிகழ்வுகள், பேச்சு என்பன நடைபெற்றன. குழந்தைகளின் சித்திரக் கண்காட்சியும் இடம்பெற்றது. மேலும் விசேட தேவையுடைய குழந்தை ஒருவரின் தாயார் சுஜித்ரா என்பவரினால் நிகழ்ச்சிக்கு நன்றியுரை வழங்கப்பட்டது. அவர் தனது உரையில் தவறாது சிகிச்சையைத் தொடர்வதற்கு உதவி வரும் தந்தையர்களுக்கு நன்றி கூறியதோடு மட்டுமல்லாமல் அனைவருடைய உழைப்பும், சிகிச்சை நிலைய முகாமையாளர் ஜீவராணியின் தொடர்ச்சியான அர்ப்பணிப்பும் உதவியதாகவும் கல்முனை சிகிச்சை நிலையத்தில் சில தந்தையர் இக் குழந்தைகளின் வளர்ச்சியில் பாடுபட்டு வருவதாகவும் பங்குபற்றியவர்களை ஊக்குவித்தும் இந் நிகழ்வுகளுக்கு ஆதரவு அளித்த தனிப்பட்ட நன்கொடையாளர்கள் மட்டுமன்றி அனைத்து நல்லுள்ளங்களுக்கும் நன்றி தெரிவித்து தனது நன்றியுரையை முடித்துக்கொண்டார்.

மேலும் நிகழ்வில் வைத்தியசாலையின் தாதியபரிபாலகர் திரு.N.சசிதரன், தாதியபரிபாலகி திருமதி.L.சுஜேந்திரன், நிர்வாக உத்தியோகத்தர் திரு.T.தேவஅருள், வைத்தியசாலையின் உத்தியோகத்தர்கள் ஊழியர்கள், பாடசாலை அதிபர்கள், ஆசிரியர்கள், நலன்விரும்பிகள் மற்றும் குழந்தைகளின் பெற்றோர் ஆகியோர் கலந்து சிறப்பித்திருந்தனர்.