தென்கிழக்கு பல்கலைக்கழக  அனைத்து கல்வி நடவடிக்கைகளும் இடைநிறுத்தம்!

பாறுக் ஷிஹான்

சீரற்ற காலநிலை மற்றும் வெள்ள அபாயம் காரணமாக முதல் தென்கிழக்கு பல்கலைக்கழக ஒலுவில் வளாகத்தின் அனைத்து கல்வி நடவடிக்கைகளும் 2024 ஜனவரி 16 ஆம் தேதி வரை இடைநிறுத்தப்பட்டுள்ளதாக உபவேந்தர் பேராசிரியர் ரமீஸ் அபூபக்கர் தெரிவித்துள்ளார்

தற்போதைய காலநிலை முன்னறிவிப்புகளால் ஏற்படக்கூடிய சாத்தியமான ஆபத்துகளை கவனமாக ஆராய்ந்த பிறகு பல்கலைக்கழகத்தின் மூத்த ஆலோசனைக் குழு இந்த முடிவை எடுத்துள்ளது.

அதேவேளை சம்மாந்துறை வளாகத்தின் பிரயோக விஞ்ஞான பீட கல்வி நடவடிக்கைகள் வழமை போன்று செயற்படும் எனவும் தெரிவிக்கப்படுகிறது. 

வெள்ள அனர்த்தம் தொடர்பில் விடுதியில் தங்கியுள்ள மாணவர்கள் அனைவரும் பாதுகாப்பாக வெளியேற்றப்பட்டுள்ளதோடு பல்கலைகழக தாழ்நில பிரதேசத்தில் காணப்படுகின்ற அசையும் சொத்துக்களை பாதுகாக்கும் முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக உபவேந்தர் மேலும் தெரிவித்துள்ளார்.

இதே வேளை சேனநாயக்க நீர் மட்டம் 108.50அடி /110 அடி நிறைந்துள்ளதாகவும் இதனை அடுத்து  5 வான்கதவு திறக்கப்பட்டு 5.5 அடி  நீர் தற்போது  வெளியேற்றப்பட்டுள்ளதுடன் வெளியாகும் நீர் பாய்ச்சலின் அளவு கடுமையாக அதிகரித்துள்ளது என  அம்பாறை மாவட்ட அனர்த்த முகாமைத்துவ நிலையத்தின் உதவிப் பணிப்பாளர் எம்.ஏ.சி. முகம்மட் றியாஸ் தெரிவித்தார். 

எனவே மக்கள் கடும் அவதானத்துடன் இருக்குமாறும்   நீர்மட்டம் இன்னும் அதிகரிக்கக் கூடும் எனவும் எதிர்பார்க்கப்படுகின்றது.