தமிழரசுக் கட்சியின் தலைமைத் தெரிவு அடுத்த மாதம் ஜனவரி திருகோணமலையில் இடம் பெறும் பொதுக்குழு கூட்டத்தில் இடம் பெறும்.

கட்சியின் தலைமை பதவிக்கு போட்டியிட நாடாளுமன்ற உறுப்பினர்களான சிவஞானம் ஸ்ரீதரன், எம். ஏ. சுமந்திரன் ஆகியோர் கட்சிச் செயலாளரிடம் தங்கள் விண்ணப்பங்களை சமர்ப்பித்துள்ளனர். இதேவேளை பத்து வருடங்களாக தலைமை பதவியை வகித்து வந்த மாவை சேனாதிராஜா போட்டியிட விண்ணப்பிக்கவில்லை என அறிய முடிகிறது.

இருந்த போதும் சுமந்திரன், ஸ்ரீதரன் ஆகியோருக்கிடையில் தலைமை பதவிக்கான போட்டி வலுவாக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இதுவரை தமிழரசுக் கட்சியின் தலைவர்கள் போட்டியின்றி ஏக மனதாக தெரிவு செய்யப்பட்டமையே வரலாறு.
ஆனால் இம்முறை ஒன்றுக்கு மேற்பட்டவர்கள் விண்ணப்பித்துள்ளமையால் வாக்கெடுப்பின் மூலம் தெரிவு செய்யப்படுவார்.

ஜனவரி மாதம் 21 ஆம் திகதி இடம்பெறும் பொதுக்குழு கூட்டத்தில் தலைவர் தெரிவு இடம்பெற்று 28ஆம் திகதி இடம்பெறும் தேசிய மாநாட்டில் புதிய தலைவர் உரையாற்றுவார் என எதிர்பார்க்கப்படுகிறது.