இந்தியா இலங்கைக்கு மீண்டும் பல திட்டங்களுக்கு உதவி!

இலங்கையின் ஒன்பது அபிவிருத்தி திட்டங்களை விரைவாக நிறைவு செய்யும் வகையில் இலங்கைக்கு கூடுதல் நிதி வழங்குவதற்கு இந்தியா உறுதியளித்துள்ளது.

இந்தியாவின் வெளிவிவகார அமைச்சர் எஸ்.ஜெய்சங்கர் நேற்று (11.10.2023) ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவை ஜனாதிபதி செயலகத்தில் சந்தித்தார்.

இந்திய-இலங்கை உறவுகளை மேலும் வலுப்படுத்த விரிவான கலந்துரையாடல் இதன்போது இடம்பெற்றது.

அத்துடன் இரு நாடுகளுக்கும் இடையிலான ஒத்துழைப்பை மேம்படுத்தும் நோக்கில் மூன்று புதிய இருதரப்பு ஒப்பந்தங்களும் கைச்சாத்திடப்பட்டன.
இந்த நிலையில் இலங்கை மக்களின் வாழ்க்கையை மேம்படுத்துவதற்காக, தற்போது இந்திய அரசாங்கத்தால் ஆதரிக்கப்படும் ஒன்பது அபிவிருத்தித் திட்டங்களை விரைவாக முடிப்பதற்கு மேலதிக நிதியை வழங்குவதற்கு இந்திய அரசாங்கம் உறுதியளித்துள்ளது.

அத்துடன் இந்த முயற்சிக்கான உடன்படிக்கையும், கைச்சாத்திடப்பட்டதாக ஜனாதிபதி ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.