நீதிபதியை நான் அச்சுறுத்தவில்லை: சரத் வீரசேகர பதற்றம்

முல்லைத்தீவு நீதிபதி சரவணராஜாவை நான் அச்சுறுத்தவில்லை. அவர் புகலிடக் கோரிக்கைக்காக இவ்வாறான குற்றச்சாட்டுக்களை முன்வைத்துள்ளாரா என்ற சந்தேகம் நிலவுவதாக நாடாளுமன்ற உறுப்பினர் சரத் வீரசேகர தெரிவித்துள்ளார்.

குருந்தூர் மலை விவகாரம் மற்றும் ‘தியாக தீபம்’ திலீபனின் நினைவேந்தல் விவகாரம் போன்றவற்றில் மிகமுக்கிய தீர்ப்புக்களை வழங்கிய முல்லைத்தீவு மாவட்ட நீதிபதி ரி.சரவணராஜா, உயிர் அச்சுறுத்தல்கள் மற்றும் மிகையான அழுத்தங்கள் காரணமாகத் தனது அனைத்துப் பதவிகளிலிருந்து விலகுவதாக குறிப்பிட்டு நாட்டைவிட்டு வெளியேறியுள்ளார்.

இந்த நிலையில், இவரது பதவி விலகல் தொடர்பில் கொழும்பு ஊடகம் ஒன்றுக்கு வழங்கிய செவ்வியிலேயே சரத் வீரசேகர மேற்கண்டவாறு கூறியுள்ளார்.

முல்லைத்தீவு மாவட்ட நீதிபதி சரவணராஜாவுக்கு நான் அச்சுறுத்தல் விடுத்ததாக வடக்கு மற்றும் கிழக்கு மாகாண தமிழ் அரசியல்வாதிகள் என்னை சுட்டிக்காட்டி அறிக்கை வெளியிட்டுள்ளதை அவதானித்துள்ளேன்.

இந்தக் குற்றச்சாட்டுக்கள் அடிப்படையற்றவை. நாடாளுமன்ற சிறப்புரிமையைப் பயன்படுத்தி நான் நீதிபதியை அச்சுறுத்தவில்லை. நீதிமன்ற நடவடிக்கையில் தலையிடவும் இல்லை.

உயிர் அச்சுறுத்தல் காரணமாக நீதிபதி பதவியில் இருந்து விலகி நாட்டை விட்டு வெளியேறியுள்ளதாக குறிப்பிடுவது பாரதூரமானது.

நாட்டில் நீதிபதிக்கே பாதுகாப்பு இல்லையென்றால் சாதாரண மக்களின் நிலை எவ்வாறு அமையும் என்ற கேள்வி எழுந்துள்ளது.