-அபு அலா-

விகாராதிபதி மைத்திரி மூர்த்தி மஹாநாயக்க தேரர் மற்றும் விகாராதிபதி ராக்ஷபதி அகுங்கல்லே விமல தம்ம திஸ்ச மஹாநாயக்க மஸ்த்ரவில அமரபுர மூலவன்ச பார்சவய தேரருக்கும் விளக்கம் அளித்த கிழக்கு மாகாண ஆளுநர் செந்தில் தொண்டமான்!

திருகோணமலை நிலாவெளி இழுப்பை குளம் பகுதியில் நிர்மாணிக்கப்படவிருக்கும் பௌத்த விகாரையின் நிர்மாணப்பணிகளை நிறுத்துமாறு கோரி பொதுமக்கள்  எதிர்ப்பு ஆர்ப்பாட்டங்களை முன்னெடுத்து வந்ததோடு, இதனால் இனமுருகல்கள்  ஏற்படும்  என கிழக்கு மாகாண ஆளுநர் கௌரவ செந்தில் தொண்டைமானுடைய கவனத்திற்கு கொண்டுவந்ததையடுத்து, நிர்மாணிக்க இருக்கும் விகாரையின் பணிகள்  நிறுத்தப்பட்டன.

இது தொடர்பாக பல அரசியல்வாதிகள் ஆளுநருக்கு அழுத்தம் கொடுத்த போதிலும் ஆளுநருடைய  முடிவில் அவர் உறுதியாக இருந்தார்.

பலாங்கொட மிரிஷ்வத்த தம்மானந்த பிரிவென விகாரையின் கிளையான அம்பருக்காஹரம விகாரையின் கிளை விகாரையாக நிலாவெளியில் அமைக்கப்படவிருந்த விகாரை தொடர்பாக, உரிய விகாரைகளுக்கு சென்று, அங்குள்ள விகாராபதிகளை சந்தித்து இப்பிரச்சினை குறித்து கிழக்கு மாகாண ஆளுநர் செந்தில் தொண்டமான் விளக்கமளித்தார்.

பலாங்கொட மிரிஷ் வத்த தம்மானந்த பிரிவென விகாரையின் விகாரபதி அமரபுற மஹா நிக்காய வணக்கத்திற்குரிய சங்கநாயக கரவிட்ட உயாங்கொட மைத்திரிமூர்த்தி மஹாநாயக்க தேரர்,அம்பருக்காஹரம விகாரை அமரபுற சமாகமே மூலஸ்தானய, அமரபுற மூலவன்சிக பாரஷவிய மூலஸ்தானய வெளித்தர பலப்பிட்டிய விகாரையின் விகாராதிபதி வணக்கத்திற்குரிய ராக்ஷபதி அகுங்கல்லே விமல தம்ம திஸ்ச மஹாநாயக்க மஸ்த்ரவில அமரபுர மூலவன்ச பார்சவய தேரர் ஆகியோரை  கிழக்கு மாகாண ஆளுநர் என்ற வகையில் சந்தித்து,விகாரை அமைப்பதால் ஏற்படும் சிக்கல்கள் குறித்து ஆளுநர் தெளிவுப்படுத்தினார்.

நிலாவெளி இலுப்பை குளம் பகுதி மக்களின் ஆதரவுடன் விகாரை அமைக்கப்படாமல், எதிர்ப்புக்கு மத்தியில் விகாரை அமைக்கப்படும் பொழுது அங்கு இனங்களுக்கிடையிலான முறுகல் நிலையை ஏற்படுகின்றது. எனவே ஆளுநர் என்ற வகையில் இனமுறுகல் ஏற்படுவதை தவிர்க்கும் முகமாக   தன்னுடைய கடமையை செய்துள்ளதாக ஆளுநர் விளக்கம் அளித்தார்.

ஆளுநர் என்ற வகையில் கிழக்கு மாகாணத்தில் உள்ள அனைத்து இனங்களின் உரிமைகளை சமமாக பாதுகாக்க வேண்டியது எனது கடமை எனவும் தெரிவித்தார்.

மேலும் தமிழ் மக்கள், வட இந்தியர்கள், தென் கொரியா,தாய்லாந்து, பூட்டான்,ஜப்பான்,சீனா, நேபால், தாய்வான், இந்தோனேஷியா போன்ற பல நாடுகளில் புத்த பெருமானை வழிபடுகின்றனர். அவருடைய போதனைகளை முழுமையாக பாதுகாக்க வேண்டிய பொறுப்பு அனைவருக்கும் உண்டு.இவ்வாறான சூழ்நிலையில் விகாரை  அமைக்க கூடாது என எதிர்ப்பு போராட்டங்கள் முன்னெடுக்கும் பொழுது அரசாங்கம் என்ற வகையில் அதற்கு உரிய நடவடிக்கை மேற்கொள்ள வேண்டிய பொறுப்பு எனக்கு உள்ளது. எனவே இவ்விடயம் தொடர்பாக அனைத்து தரப்பினரும் கலந்துரையாடி சுமூகமான தீர்வு பெற்றுதருவதன் மூலம் இனங்களுக்கு கிடையிலான ஒற்றுமையை பலப்படுத்த முடியும் என தெரிவித்தார்.

You missed