ஆலையடிவேம்பு பிரதேச இந்து மாமன்றத்தின் 20ஆம் ஆண்டு நிறைவு விழா: கட்டிட திறப்பு நிகழ்வும்….

 -ம.கிரிசாந்-

ஆலையடிவேம்பு பிரதேச இந்து மாமன்றத்தின் 20ஆம் ஆண்டு நிறைவு விழா நேற்றய தினம் (13) காலை 8.30 மணியளவில் அகில இலங்கை இந்துமாமன்றத்தின் அனுசரணையுடன் திரு.வே.சந்திரசேகரம் அவர்கள் தலைமையில் கோலாகலமாக இடம்பெற்றது.

20 வருடங்களாக சமூகத்திற்காக பல ஆன்மீகம் சார்ந்த செயற்பாடுகளை முன்னெடுத்து வருகின்ற அமைப்பென்ற ரீதியில் இடம்பெற்ற 20ஆம் ஆண்டு நிறைவு விழா, ஆலையடிவேம்பு பிரதேச, அக்கரைப்பற்று வம்மியடி பிள்ளையார் ஆலயத்தில் சிறப்பு பூசை வழிபாடுகளுடன் ஆரம்பிக்கப்பட்டு பிரதான வீதியின் ஊடாக கிராமிய இசைக்கருவிகள் இசைக்கப்பட்டு கலாச்சார நடன நிகழ்வுகள் என்பனவற்றுடன் அதிதிகள் வரவேற்று அழைத்துவரப்பட்டனர்.

தொடர்ந்து ஆலையடிவேம்பு பிரதேச இந்து மாமன்ற வளாக முன்றலில் காணப்படும் ஆறுமுகநாலர் சிலைக்கு அதிதிகளால் மலர் மாலை அணிவிக்கப்பட்டு அதனை அடுத்து மேல் மாடி கட்டிடத்தொகுதி திரைநீக்கம் செய்யப்பட்டதுடன்.

இயமலை, ரிஷிகேஸ் சுவாமி நித்தியானந்த சரஸ்வதி மகராஜ் அவரின் ஆசியுரை, மன்ற தலைவர் திரு.வே.சந்திரசேகரம் அவர்களால் தலைமையுரை , இருபதாம் ஆண்டு நிறைவு நினைவு சிறப்பு விழா மலர் வெளியீடு, குறித்த மலர் தொடர்பான பார்வை திரு.நா.செல்வநாதன் அவர்களாலும், இருபது ஆண்டுகளில் இந்து மாமன்றத்தின் வளர்ச்சி கண்ணோட்டம் மன்ற செயலாளர் திரு.ஸ்ரீ. மணிவண்ணன் அவர்களாலும் வழங்கப்பட்டிருந்தது.

மேலும் நிகழ்வில் அதிதிகள், மன்றத்தின் மூத்த உறுப்பினர்கள் கௌரவிக்கப்பட்டதுடன் நினைவு சின்னங்களும் வழங்கி வைக்கப்பட்டிருந்தது, அத்துடன் கலை நிகழ்வுகளில் பங்கு பற்றிய மாணவர்களுக்கு பரிசுகள் வழங்கப்பட்டதுடன். அகில இலங்கை இந்து மாமன்றத்தினால் அறநெறி பாடசாலை ஆசிரியர்களுக்கான காலாசார உடைகள் மற்றும் சமய நூல்களும் வழங்கி வைக்கப்பட்டன.

நிகழ்வின், அகில இலங்கை இந்து மாமன்றத்தின் தலைவர் திரு.மா.தவயோகராஜா, அம்பாரை மாவட்டம் மேலதிக அரசாங்க அதிபர் திரு.வே.ஜெகதீசன், அகில இலங்கை இந்து மாமன்றத்தின் பொதுச் செயலாளர் திரு.வே.கந்தசாமி, அகில இலங்கை இந்து மாமன்றத்தின் பிரதித் தலைவர் விடைக்கொடிச் செல்வன் திரு.சி.தனபாலா, முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் திரு.கவீந்திரன் கோடீஸ்வரன், அம்பாரை மாவட்ட இந்து கலாசார உத்தியோகத்தர் திரு.கு.ஜெயராஜ், தென்கிழக்கு பல்கலைக்கழக சிரேஸ்ட விரிவுரையாளர் Dr.அனுசியா சேனாதிராஜா, வைத்தியர் Dr.குணாளினி சுபராஜ், இந்து இளைஞர் மன்ற தலைவர் இறைபணிச் செம்மல் திரு.த.கைலாயபிள்ளை, ஆலையடிவேம்பு பிரதேச இந்து கலாசார உத்தியோகத்தர் திருமதி.சர்மிளா பிரசாத் என்பவர்கள் பிரதம அதிதிகளாகள், விசேட அதிதிகள் மற்றும் சிறப்பு அதிதிகளாக கலந்து சிறப்பித்திருந்தார்கள்.

மேலும் ஆலையடிவேம்பு பிரதேச இந்து மாமன்ற தலைவர் திரு.வே.சந்திரசேகரம் , இந்து மாமன்ற செயலாளர் திரு.ஸ்ரீ. மணிவண்ணன், இந்துமாமன்ற உறுப்பினர்கள் அறநெறி ஆசிரியர்கள், அறநெறி மாணவர்கள், பிரதேச மக்கள் என பலரும் குறித்த நிகழ்வில் கலந்து கொண்டிருந்தார்.

You missed