தனியார் கல்வி நிலையங்களை ஒழுங்குபடுத்தப்பட்ட முறையின்கீழ் கொண்டு வருவது தொடர்பில் விசேட கலந்துரையாடல்!!

கிராமிய வீதிகள் அபிவிருத்தி இராஜாங்க அமைச்சரும் மாவட்ட அபிவிருத்தி குழு தலைவருமான கௌரவ சிவ.சந்திரகாந்தன் தலைமையில் மாணவர்களின் நலன்கருதி அவர்களின் உடல் மற்றும் உளவியல் ரீதியான ஆரோக்கியத்தை பேணும் நோக்கோடும் கல்விச் சுமையினால் ஏற்படும் மன அழுத்தத்தினை குறைக்கும் நோக்கோடும் உயர்தர போட்டி பரீட்சைக்குதோற்றவிருக்கும் மாணவர்கள் தவிர்ந்த ஏனைய வகுப்பு மாணவர்களுக்கு போயா மற்றும் ஞாயிறு தினங்களில் தனியார் வகுப்புக்கள் நாடாத்தப்படுவதனை நிறுத்துவது தொடர்பிலும் தனியார் கல்வி நிலையங்களின் உட்கட்டுமான வசதிகளை மேம்படுத்துவது தொடர்பிலும் குறித்த கலந்துரையாடலில் ஆராயப்பட்டது.

இதன் போது பின்வரும் தீர்மானங்களும் முன்மொழியப்பட்டிருந்தது அவையாவன…

  1. பாடசாலை நாட்களில் அதிகாலையில் தரம் 01 தொடக்கம் 10 வரையான வகுப்பு மாணவர்களுக்கு பிரத்தியேக வகுப்புகள் தவிர்க்கப்பட வேண்டும்.
  2. எந்த ஒரு நாளிலும் மாலை 7 மணிக்கு பின் பிரத்தியேக வகுப்புகள் தவிர்க்கப்பட வேண்டும்.
  3. க.பொ.த உயர்தர வகுப்பு மாணவர்களை விடுத்து ஏனைய மாணவர்களுக்கு ஞாயிறு மற்றும் பூரணை தினங்களில் பிரத்தியேக வகுப்புகளை தவிர்ப்பது.
  4. தனியார் கல்வி நிறுவனங்களின் பதிவு கட்டணம் மணித்தியாலக் கொடுப்பனவு ஏனைய கொடுப்பனவுகள் பொதுமைப்படுத்தல் வேண்டும்.
  5. சங்கம் ஒன்றினை அமைத்து அதனூடாக கற்பிக்கும் ஆசிரியர்களின் தகமை அல்லது முன் அனுபவம் உறுதிப்படுத்தப்பட வேண்டும்.
  6. சுகாதார வசதிகளை மேம்படுத்தும் முகமாகவும் தொற்று நோய்களை தவிர்க்கும் முகமாகவும்
    சில உட்கட்டுமானங்களை கட்டாயப்படுத்துதல். (மலசல கூட வசதிகள், குடிநீர் வசதிகள், இருக்கை வசதிகள்)

மேற்படி தீர்மானங்கள் தொடர்பில் விரிவாக கலந்துரையாடியதுடன் மிக விரைவில் அவற்றை கிழக்கு மாகாணம் பூராகவும் அமுலுக்கு கொண்டு வருவதற்கான நடவடிக்கைகள் இராஜாங்க அமைச்சரால் முன்னெடுக்கப்படவுள்ளதாக தெரிவிக்கப்பட்டது.

மேற்படி விசேட கலந்துரையாடலின் போது பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர், மட்டக்களப்பு மாநகர பிரதி ஆணையாளர், மண்முனை வடக்கு உதவிப் பிரதேச செயலாளர், தமிழ் மக்கள் விடுதலை புலிகள் கட்சியின் பொதுச் செயலாளரும் முன்னாள் மாகாண சபை உறுப்பினரும் தற்போதைய கிராமிய வீதிகள் அபிவிருத்தி இராஜாங்க அமைச்சரின் இணைப்பு செயலாளருமான பூ.பிரசாந்தன், தமிழ் மக்கள் விடுதலை புலிகள் கட்சியின் பிரதிச் செயலாளர் நிர்வாகம் வயிரமுத்து பஞ்சலிங்கம், கல்வி, கலை, கலாசார செயலாளர் சந்திரசேகரன் மணிசேகரன் உட்பட தனியார் கல்விநிலைய உரிமையாளர்கள், ஆசிரியர்களென பலரும் கலந்து கொண்டனர்.