போராட்டங்களை நடத்துவதற்காக தொழிற்சங்க தலைவர்கள் பயணங்களை மேற்கொள்ளத் தேவையான எரிபொருட்களை ஜனாதிபதியே வழங்குவதாக ஐக்கிய தேசியக் கட்சியின் தவிசாளர் வஜிர அபேவர்தன தெரிவித்துள்ளார்.

நாட்டில் நிலவி வந்த வரிசைகளை இல்லாதொழித்து, போக்குவரத்து செய்ய ஜனாதிபதி எரிபொருள் வழங்கியுள்ளார் என அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

சவால்களை ஏற்றுக் கொண்ட ஜனாதிபதி

எரிபொருள் வரிசை, எரிவாயு வரிசை போன்றே உர வகைகள் இன்றி விவசாயிகள் அவதியுற்றிருந்த நாடு அராஜக நிலையில் இருந்த காலத்தில் சிலர் பிரச்சினைகளிலிருந்து தப்பிச்சென்ற போது அந்த சவால்களை ஜனாதிபதி ஏற்றுக் கொண்டார் என அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

பெட்ரோல், டீசல், எரிவாயு, மண்ணெண்ணெய், பால் மா உள்ளிட்ட பொருட்களுக்கான தட்டுப்பாட்டு நிலையை நீக்கிய ஜனாதிபதி ஓரளவு பிரச்சினைகளுக்கு தீர்வு வழங்கியுள்ளார் என அவர் தெரிவித்துள்ளார்.

சர்வதேசத்தின் தேவைக்காக போராட்டம்

நாடு ஓரளவு வழமைக்குத் திரும்பிக் கொண்டிருக்கும் தருணத்தில் இவ்வாறான போராட்டங்கள் நடத்துவது, சுற்றுலாப் பயணிகளை பாதிக்கும் என அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

சர்வதேசத்தின் தேவைகளுக்கு ஏற்ற வகையில் இந்த போராட்டங்கள் முன்னெடுக்கப்படுவதாக அவர் தெரிவித்துள்ளார்.

ஜனாதிபதியின் நடவடிக்கைகளை விமர்சனம் செய்பவர்கள் மாற்று வழிகளை பரிந்துரை செய்ய முடியும் என வஜிர அபேவர்தன தெரிவித்துள்ளார்.