வடக்கில் இருந்து கிழக்கு நோக்கிய பேரணியானது யாழ். பல்கலைகக் கழக, கிழக்கு பல்கலைக் கழக மாணவர்களும் தமிழ் தேசிய கூட்டமைப்பு மற்றும் சிவில் சமூகங்களின் ஆதரவோடு முன்னெடுக்கப்பட்டு வரும் உரிமைக்கான போராட்டம் இன்று காலை திருகோணமலை மாவட்டத்தின் வெருகலம்பதி சித்திரவேலாயுதர் சுவாமி ஆலயத்தில் இருந்து மட்டக்களப்பு மாவட்டத்தின் எல்லையாக காணப்படும் கதிரவெளியை வந்தடைந்தது.

அங்கு மதத் தலைவர்கள் மற்றும் தமிழ் தேசிய உணர்வாளர்கள் அவர்களை உற்சாகத்துடன் வரவேற்றனர்.

இலங்கையின் 75 ஆவது சுதந்திர தினத்தை ‘கறுப்பு தினம்’ என பிரகடனப்படுத்தி தமிழ் மக்களின் அரசியல் மற்றும் நில உரிமைகளை கோரி இப்பேரணி முன்னெடுக்கப்பட்டுள்ளது.

‘வடக்கும் கிழக்கும் தமிழர் தாயகம்,’ ‘விழவிழ எழுவோம்’ என்ற கோசத்துடன் பதாதைகளை கையில் ஏந்தியவாறும் சிகப்பு, மஞ்சள் நிற கொடிகளை கையில் ஏந்தியவாறு வாகரை மாங்கேணி ஓட்டமாவடி வாழைச்சேனை ஆகிய வீதிகள் ஊடாக கிரான் ஆச்சிரமத்தினை வந்தடைந்தது. அங்கிருந்து மட்டக்களப்பு நகர் நோக்கி ஊர்வலமாக சென்றனர்.

இப்பேரணியானது கடந்த 4 ஆம் திகதி யாழ் பல்கலைக்கழக வளாகத்தில் இருந்து அரச பாதுகாப்பு பிரிவினரின் எதிர்ப்புக்கு மத்தியில் கிளிநொச்சி முல்லைத் தீவு ஊடாக நேற்று 6 ஆம் திகதி திருகோணமலையை வந்தடைந்தனர்.

இன்று கிழக்கு பல்கலைக்கழக மாணவர்கள் மாவட்ட அரசியல் பிரமுகர்கள் மற்றும் காணமல் ஆக்கப்பட்ட உறவுகளுடன் இணைந்து கொள்வர்.

இதேவேளை அப்பாறை மாவட்டத்தினை பிரதிநிதித்துவப்படுத்தும் வலிந்து காணமல் ஆக்கப்பட்டோர்களின் உறுவுகளும் இன்று மாலை மட்டக்களப்பு நகர் காந்தி பூங்காவில் இணைந்து கொள்வர்.

மாலை 4 மணிக்கு காந்தி பூங்காவில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ள கூட்டத்தில் பேரணி தொடர்பான பிரகடணம் வாசிக்கப்பட்ட பின்னர் பேரணி தொடர்பான கவனயீர்ப்பு போராட்டம் நிறைவு பெறும்.