இந்திய வெளிவிவகார அமைச்சர் எஸ்.ஜெய்சங்கர் அடுத்த வாரம் இலங்கை வருவார் என ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார்.

இந்தியாவும், இலங்கையும் கடன் மறுசீரமைப்பு பேச்சுவார்த்தையில் ஈடுபட்டுள்ள நிலையில் இந்த பயணம் இடம்பெறுகிறது.

சர்வதேச நாணய நிதியம், 2.5 பில்லியன் டொலர் நிதி உதவியை வழங்குவதற்காக இலங்கை தாம் பட்ட கடனை மறுசீரமைக்க வேண்டும் என்று விரும்புகிறது.

ரணிலின் நம்பிக்கை

இந்தநிலையில் சர்வதேச நாணய நிதியத்திடமிருந்து 2.5 பில்லியன் டொலர்களை பெற்றுக் கொண்டதன் பின்னர், உலக வங்கி மற்றும் ஆசிய அபிவிருத்தி வங்கியிடமிருந்து இலங்கைக்கு கிட்டத்தட்ட 5 பில்லியன் டொலர்களை பெற்றுக் கொள்ள முடியும் என விக்ரமசிங்க நம்பிக்கை வெளியிட்டுள்ளார்.

இதனையடுத்து இலாபமற்ற அரசாங்க நிறுவனங்களின் மறுசீரமைப்பிலிருந்து 3 பில்லியன் டொலர்களைச் சேர்த்த பிறகு, மொத்தம் 10 பில்லியன் டொலர்களை திரட்ட முடியும்.

இது பொருளாதாரத்தை மீட்டெடுக்கவும் நாட்டை அதன் துன்பத்திலிருந்து வெளியே கொண்டு வரவும் உதவும் என்று ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார்.

கடன் வழங்கிய நாடுகளின் நிலைப்பாடு

பெண்கள் தொழில் மற்றும் வர்த்தக சம்மேளனத்தின், பெண் தொழில்முனைவோரை மதிப்பிடும் வகையில், கொழும்பில் இடம்பெற்ற நிகழ்வின்போது ஜனாதிபதி இந்த தகவல்களை வெளியிட்டுள்ளார்.

இலங்கைக்கு கடன் வழங்கிய நாடுகள் எமக்கு உதவ தயாராக இருப்பதாக ஏற்கனவே தெரிவித்துள்ளன.

ஏற்கனவே இந்தியா மற்றும் சீனாவுடன் பேச்சுவார்த்தை ஆரம்பிக்கப்பட்டுள்ளது. சமீபத்தில் சீனா எக்சிம் வங்கியுடனான கலந்துரையாடல்களின்படி, சீனத் தரப்பு விரைவாகச் செல்ல இணங்கியுள்ளது என்று ரணில் தெரிவித்தார்.