கட்டுநாயக்க பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையத்தின் வருகை முனையத்தில் விழுந்து உயிரிழந்தவர் தொடர்பான மேலதிக தகவல்களை பொலிஸார் வெளியிட்டுள்ளனர்.

இலங்கையை பூர்வீகமாகக் கொண்ட கனேடிய பிரஜை ஒருவரே கட்டுநாயக்க சர்வதேச விமான நிலையத்தில் விழுந்து உயிரிழந்துள்ளதாக விமான நிலைய பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

54 வயதான புத்திக கருணாரத்ன என்ற இந்த நபர் இலங்கையின் பெத்தகான பிரதேசத்தில் வசிப்பவராகும்.

அவரும் அவரது தாயாரும் கட்டாரின் டோஹாவில் இருந்து நேற்று அதிகாலை 02.18 மணியளவில் கட்டார் ஏர்வேஸ் கியூ.ஆர். 662 என்ற விமானத்தில் கட்டுநாயக்க விமான நிலையத்தை வந்தடைந்தனர்.

அவர் தனது தாயை கனடாவில் இருந்து இலங்கைக்கு அழைத்து வந்துள்ளார்.

அதிகாலை 03.50 மணியளவில் கட்டுநாயக்க விமான நிலைய வருகை முனையத்தின் முகப்பு ஊடாக வெளியேறச் சென்று கொண்டிருந்த போது இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளது.

அவரது மரணத்திற்கு திடீரென ஏற்பட்ட மாரடைப்பே காரணம் என கட்டுநாயக்க விமான நிலைய பொலிஸார் தெரிவித்தனர்.

அவரது சடலம் நீர்கொழும்பு பொது வைத்தியசாலையின் பிரேத அறையில் வைக்கப்பட்டுள்ளது.