எரிவாயு விநியோகம் தொடர்பில் லிட்ரோ நிறுவனம் விசேட அறிவிப்பொன்றை வெளியிட்டுள்ளது.

இதன்படி, எதிர்வரும் நாட்களில் விநியோகிப்பதற்கு தேவையான எரிவாயு போதுமான அளவு கையிருப்பில் இருப்பதாக லிட்ரோ நிறுவனத்தின் தலைவர் முதித பீரிஸ் தெரிவித்தார்.

இதன் காரணமாக பொதுமக்கள் அச்சம் கொள்ளத் தேவையில்லை என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

இது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில், நுகர்வுக்கு தேவையான அளவு எரிவாயு கையிருப்பில் உள்ளது.

கோவிட் தொற்று காரணமாக இரண்டு வருடங்களின் பின்னர் நத்தார் மற்றும் புதுவருட கொண்டாட்டங்கள் காரணமாக எரிவாயுக்கு அதிகளவிலான கேள்வி நிலவுகிறது.

விலை குறையும் என்று கூறமுடியாது

நாட்டிற்கு மாதாந்தம் 24,000 மெட்றிக்தொன் எரிவாயு தேவைப்படுகின்ற போதிலும் இந்த மாதம் 35,000 மெட்றிக்தொன் எரிவாயு கொள்வனவு செய்யப்பட்டுள்ளது.

மேலும் ஜனவரி மாதத்திற்கு தேவையான எரிவாயு அளவினை விட மேலதிகமாக 27,000 மெட்றிக்தொன் எரிவாயு கொள்வனவு செய்ய நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளன.

அதற்கமைவாக நாட்டு மக்கள் அச்சமின்றி எரிவாயு கொள்வனவு செய்ய முடியும்.

இதனிடையே அடுத்த ஆண்டு முதலாவது எரிவாயு விலை திருத்தத்தின் போது விலை குறைவடையும் என்று உறுதியாக எதிர்பார்க்க முடியாது.

இதேவேளை, டிசம்பர் மாதத்தில் ஐரோப்பாவில் அதிகளவிலான எரிவாயு நுகரப்படுகின்றமை, ரஷ்யா – உக்ரேன் யுத்தம் மற்றும் பல்வேறு நாடுகளில் காணப்படும் குளிரான காலநிலை காரணமாக எரிவாயுவிற்கான விலை அதிகரிக்கப்படும் சாத்தியம் காணப்படுவதாக குறிப்பிட்டார்.