நாடு முழுவதும் உள்ள எரிபொருள் நிரப்பு நிலையங்களில் இருந்து பெறப்பட்ட எரிபொருள் மாதிரிகள் மீதான சோதனை அறிக்கை இன்று வெளியிடப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இன்ஸ்டிடியூட் ஒப் இன்டஸ்ட்ரியல் டெக்னோலஜி நிறுவனம் மூலம் எரிபொருள் மாதிரிகள் ஆய்வு செய்யப்பட்டன.

தரம் குறைந்த எரிபொருள் விநியோகம்

இந்த நிலையில் சில எரிபொருள் நிரப்பு நிலையங்கள் தரம் குறைந்த எரிபொருளை விநியோகிக்கின்றனவா என்பதை அறிக்கையின் அடிப்படையில் தீர்மானிக்க முடியும் என இலங்கை பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழுவின் தலைவர் ஜனக ரத்நாயக்க தெரிவித்துள்ளார்.

சில எரிபொருள் நிரப்பு நிலையங்கள் 95 ஒக்டேன் பெட்ரோலுக்கான விலையை வாடிக்கையாளர்களிடம் கோரும் போதுமு் 92 ஒக்டேன் பெட்ரோலை விநியோகிப்பதாக முறைப்பாடுகள் கிடைத்துள்ளதாக ஜனக ரத்நாயக்க குறிப்பிட்டுள்ளார்.

தரம் குறைந்த எரிபொருள் விநியோகம் தொடர்பாக சுமார் 200 முறைப்பாடுகள் கிடைத்துள்ளதாக அவர் கூறியுள்ளார்.

நுகர்வோர் விவகார அதிகார சபைக்கும் முறைப்பாடுகள் அனுப்பப்பட்டுள்ளதாக ஜனக ரத்நாயக்க தெரிவித்துள்ளார்.

சீல் வைக்கப்பட்ட எரிபொருள் நிரப்பு நிலையங்கள்

இலங்கை பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழு, நுகர்வோர் விவகார அதிகாரசபை மற்றும் நிறை மற்றும் அளவீடுகள் திணைக்களம் ஆகியவற்றின் கூட்டுப் பரிசோதனையைத் தொடர்ந்து, வெல்லவாயவில் உள்ள எரிபொருள் நிரப்பு நிலையத்திற்கு அண்மையில் சீல் வைக்கப்பட்டதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.

அத்துடன் கொழும்பு 7 இல் உள்ள எரிபொருள் நிரப்பு நிலையத்தில் இரண்டு 92 ஒக்டேன் பெட்ரோல் விநியோகிக்கும் இயந்திரங்களுக்கும் சீல் வைத்ததாகவும் ஜனக ரத்நாயக்க குறிப்பிட்டுள்ளார்.

முழு நாடும் பல்வேறு இன்னல்களுக்கு உள்ளாகி வரும் இவ்வேளையில் சில எரிபொருள் நிரப்பு நிலைய உரிமையாளர்கள் தேவையற்ற இலாபம் ஈட்ட முயற்சிப்பது துரதிஷ்டவசமானது மற்றும் ஏற்றுக்கொள்ள முடியாதது.

எனவே இவ்வாறான நடைமுறைகளை இல்லாதொழிப்பதற்கு இயன்ற அனைத்தையும் செய்யவுள்ளதாக ரத்நாயக்க வலியுறுத்தியுள்ளார்.