பொதுபல சேனாவின் பொதுச்செயலாளர் ஞானசார தேரர் தலைமையிலான “ஒரே நாடு ஒரே சட்டம்” ஜனாதிபதி ஆணைக்குழுவின் அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ள பரிந்துரைகளை நடைமுறைப்படுத்துவதில்லை என அரசாங்கம் தீர்மானித்துள்ளது.

நாட்டில் உடனடியாக தீர்வுகாணப்படவேண்டிய பல பிரச்சினைகள் காணப்படுவதாலும், பல தரப்பினரின் எதிர்ப்பு காரணமாகவும் அரசாங்கம் “ஒரே நாடு ஒரே சட்டம்” ஜனாதிபதி ஆணைக்குழுவின் பரிந்துரைகளை நடைமுறைப்படுத்துவதில்லை என தீர்மானித்துள்ளது.

தற்போதைய சூழ்நிலையில் ஒருநாடு ஒருசட்டத்தை விட கவனம் செலுத்தவேண்டிய முக்கியமான பல விவகாரங்கள் உருவாகியுள்ளன என இந்த விடயம் குறித்து நன்கறிந்த வட்டாரங்கள் தெரிவித்துள்ளதாக வீரகேசரி இணைய செய்திச் சேவை தெரிவித்துள்ளது.

ஜனாதிபதி ஆணைக்குழுவின் இறுதி அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ள பரிந்துரைகளை நடைமுறைப்படுத்தப்போவதிலலை எனவும் இந்த விடயம் குறித்து நன்கறிந்த வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.

நாட்டில் தற்போது உருவாகியுள்ள நிலை காரணமாக சர்வதேச நாணய நிதியம் போன்றவற்றின் ஆதரவை பெறுவதற்கு அனைத்து கட்சி அரசாங்கத்தை அமைப்பது மிகவும் முக்கியமானது என தெரிவித்துள்ள இந்த விடயம் குறித்து நன்கறிந்த வட்டாரங்கள் சர்வகட்சி அரசாங்கத்தில் இணையலாம் என அரசாங்கமும் பிரதமரும் எதிர்பார்க்கும் பல கட்சிகள் முன்னாள் ஜனாதிபதியினால் அமைக்கப்பட்ட ஆணைக்குழு குறித்து தங்கள் அதிருப்தியை வெளியிட்டுள்ளன என தெரிவித்துள்ளன.

இதேவேளை ஞானசார தேரரின் ஆணைக்குழுவின் அறிக்கையை நடைமுறைப்படுத்துவதா இல்லையா என்ற கேள்விக்கு நீதியமைச்சர் விஜயதாச ராஜபக்ச அந்த ஆணைக்குழுவின் அறிக்கை இதுவரை தனது அமைச்சிற்கு கிடைக்கவில்லை என குறிப்பிட்டுள்ளார்.

இறுதி அறிக்கை குறித்து என்ன நடவடிக்கை எடுப்பது என்பது குறித்து ஜனாதிபதியோ ஜனாதிபதி செயலகமோ எதனையும் தெரிவிக்கவில்லை என ஜனாதிபதி ஊடகப்பிரிவு தெரிவித்துள்ளது.