காத்தான்குடி பிரதேசத்தில் அமைந்துள்ள பாடசாலை ஒன்றின் அதிபர் தரம் 5 இல் கல்வி கற்றுவரும் 10 வயது மாணவனை தாக்கியதையடுத்து மாணவன் காயமடைந்த நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

இச் சம்பவத்திற்கு உடந்தையாக இருந்த ஆசிரியை ஒருவர் நேற்று(11) வியாழக்கிழமை கைது செய்யப்பட்டதுடன் அதிபர் தலை மறைவாகியுள்ளதாக காத்தான்குடி பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

குறித்த பிரதேசத்திலுள்ள பாடசாலை ஒன்றில் கல்வி கற்றுவரும் 10 வயது மாணவன் சம்பவதினமான 9 ஆம் திகதி செவ்வாய்க்கிழமை பாடசாலைக்கு சென்றுள்ள நிலையில், பாடசாலைக்கு அருகிலுள்ள கடை ஒன்றில் இடைவேளை நேரத்தில் சென்று அங்கு சாப்பிடுவதற்கான பொருட்களை வாங்கி வந்துள்ளார்.

இந்நிலையில் குறித்த மாணவன் அதிபர் கண்டு வரவழைத்து இந்த சாப்பாடு பொருட்களை வாங்க எங்கிருந்து பணம் எனகேட்டு 3 பிரம்புகளை ஒன்றிணைத்து குறித்த சிறுவனை தாக்கியுள்ளார்.

இதனையடுத்து வீடு சென்ற மாணவன் மீது தளும்புகளை கண்ட பெற்றோர் அவனிடம் விசாரித்ததையடுத்து தன்னை அதிபர் அடித்துள்ளதாக தெரிவித்துள்ளான்.

இதனையடுத்து காயமடைந்த மாணவன் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டதுடன், பெற்றோர் பொலிஸ் நிலையத்தில் நேற்று வியாழக்கிழமை (11) முறைப்பாடு செய்தனர்.

இந்நிலையில், சிறுவனை அடிக்க உடந்தையாக இருந்த ஆசிரியை கைதாகியுள்ளதோடு, அதிபர் தலைமறைவாகியுள்ளார்.

இதில் கைது செய்யப்பட்ட ஆசிரியையை இன்று (12) நீதிமன்றில் ஆஜர்படுத்த நடவடிக்கை எடுத்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

இது தொடர்பான மேலதிக விசாரணைகளை காத்தான்குடி பொலிஸ் நிலைய குற்ற விசாரணைப் பிரிவினார் மேற்கொண்டுவருகின்றனர்.