சர்ச்சைக்குரிய யுவான் வாங் 5 கப்பல் இலங்கைக்கு வரவுள்ளமை தொடர்பில் இதுவரை தமக்கு அறிவிக்கப்படவில்லை என துறைமுக அதிகார சபையின் துறைமுக அதிகாரி நிர்மல் சில்வா தெரிவித்துள்ளார்.

இன்று வருகை தரும் இந்தக் கப்பல் எதிர்வரும் 17ஆம் திகதி வரை ஹம்பாந்தோட்டை துறைமுகத்தில் நங்கூரமிடப்படும் என வெளிநாட்டு ஊடகங்கள் முன்னதாக தெரிவித்திருந்தன.

நாட்டுக்கு வரும் சீன கப்பலை இந்தியா உன்னிப்பாக கவனித்து வருகிறது என்ற முக்கியத்துவத்துடன் அது குறித்து பரபரப்பாக பேசப்பட்டது.

சர்ச்சைக்குரிய சீன கப்பல்

குறித்த சீனக் கப்பல் இலங்கைக்கு வருவதற்கு கடும் எதிர்ப்பை தெரிவிப்பதாக இந்தியா தெரிவித்திருந்தது.

இது தங்கள் நாட்டின் பாதுகாப்புக்கு அச்சுறுத்தல் என்று இந்திய அதிகாரிகள் தெரிவித்தனர்.

இந்தியாவின் கருத்திற்கு பதிலடி கொடுக்கும் வகையில் யுவான் வாங் 5 கப்பல் நாட்டிற்கு வருவது குறித்து உலகம் முழுவதும் பல விவாதங்கள் எழுந்தன.

தனது சட்டபூர்வமான கடல்சார் நடவடிக்கைகளில் வெளி தரப்பினர் தலையிட மாட்டார்கள் என எதிர்பார்ப்பதாக சீனா பகிரங்கமாக குறிப்பிட்டிருந்தது.

இந்தியா ஆட்சேபம்


இவ்வாறான பின்னணியில், யுவான் வாங் 5 கப்பலின் வருகையை ஒத்திவைக்குமாறு கொழும்பில் உள்ள சீன தூதரகத்திற்கு உத்தியோக பூர்வமாக அறிவித்துள்ளதாக வெளிவிவகார அமைச்சு தெரிவித்துள்ளது.

இந்தக் கப்பல் தொடர்பில் வெளிவிவகார அமைச்சு விடுத்துள்ள அறிக்கையில், மேலதிக ஆலோசனைகள் தேவைப்படுவதால் பயணத்தை ஒத்திவைக்குமாறு சீனத் தூதரகத்திற்குத் தெரிவித்துள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அதிருப்தியில் சீனா

பொதுவாக, ஒரு கப்பல் நாட்டிற்கு வரும் என்றால், துறைமுக அதிகாரியிடம் அனுமதி பெற வேண்டும்.

கப்பல் நாட்டிற்கு வருவதற்கு இதுவரை அனுமதி கிடைக்கவில்லை என துறைமுக அதிகாரி நிர்மல் சில்வா தெரிவித்துள்ளார்.

இவ்வாறானதொரு பின்னணியில், கப்பலின் பயணத் திசை மாற்றப்பட்டுள்ளதாக வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.