பாறுக் ஷிஹான்

ஜனநாயகத்தின் பால் தமிழ் தேசிய கூட்டமைப்பானது பயணித்து கொண்டிருக்கின்றது என தமிழ் தேசிய கூட்டமைப்பின் அம்பாறை மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் தவராசா கலையரசன் தெரிவித்தார்.

பொருளாதார நெருக்கடியும்  சமகால அரசியலும் எனும் கருப் பொருளில் தமிழ் தேசிய கூட்டமைப்பினரின் மக்கள் தெளிவு படுத்தும் கலந்துரையாடல்கள் வட கிழக்கு உட்பட பல இடங்களில் இடம்பெற்று வருகின்றன.

அதனடிப்படையில் ஞாயிற்றுக்கிழமை(31) அம்பாறை மாவட்டம் காரைதீவு கலாச்சார மண்டபத்தில் காரைதீவு பிரதேச சபை தவிசாளர்    கிருஸ்ணபிள்ளை ஜெயசிறில் தலைமையில் இடம்பெற்ற நிகழ்வில் கலந்து கொண்டு மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.

மேலும் தனது கருத்தில் குறிப்பிட்டதாவது 

நாட்டில் தற்போது அரசியல் ரீதியான குழப்பங்கள் இடம்பெற்ற வண்ணம் உள்ளது.அண்மையில் ஜனாதிபதி தெரிவு பாராளுமன்ற உறுப்பினர்கள் மூலம் தெரிவாகி இருந்தார்.எங்கள் மக்களின் கருத்துக்களையும் நாம் புரிந்து கொள்ள வேண்டும்.நல்லாட்சி அரசுக்கு தமிழ் தேசிய கூட்டமைப்பு முட்டு கொடுத்தது.எதை சாதித்தது.நல்லாட்சியின் கதாநாயகர்கள் யார் என்பதை மக்கள் அறிவார்கள்.இந்த நாட்டில் மூன்று இனங்கள் வாழக்கின்றனர்.எல்லோரும் ஏற்றுக்கொள்ளக் கூடிய ஜனநாயகத்தின் பால் தமிழ் தேசிய கூட்டமைப்பானது பயணித்து கொண்டிருக்கின்றது என்றார்.

இதன் போது தமிழ் தேசிய கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர்களான எம்.ஏ.சுமந்திரன்  இராசமாணிக்கம் சாணக்கியன்  உள்ளிட்ட முக்கியஸ்தர்கள் இக்கலந்துரையாடலில்  பங்குபற்றியதுடன்  சமகால அரசியல் போக்கு  8வது ஜனாதிபதி தெரிவும் கூட்டமைப்பின் வாக்களிப்பு தீர்மானம் பற்றிய தெளிவு படுத்தல்களை வழங்கினர்.