(சம்மாந்துறை செய்தியாளர்)
இளவயதிலேயே ஊடகத்துறையில் செய்திப் பணியாற்றி வருவதுடன், சுற்றுச்சூழல் மற்றும் சமூக விழிப்புணர்வு செயற்பாடுகளிலும் ஈடுபட்டு வரும் இளம் ஊடகவியலாளர் மின்மினி மின்ஹாவுக்கு ‘Best Young Journalist Award – 2026’ விருது வழங்கி கௌரவிக்கப்பட்டுள்ளது.
தமிழ் லெட்டர் இணையத்தளத்தின் 10ஆவது வருட நிறைவு விழா மிக விமர்சையாக (29) அக்கரைப்பற்று மாநகர சபையின் ஹல்லாஜ் மண்டபத்தில் நடைபெற்றபோதே இந்த கௌரவம் வழங்கப்பட்டது.
தமிழ் லெட்டர் ஸ்தாபகர் சிரேஷ்ட ஊடகவியலாளர் ஏ.எல். றமீஸ் நெறிப்படுத்தலில், சிரேஷ்ட ஊடகவியலாளர் தேசகீர்த்தி அதிபர் எம்.ஐ.எம். றியாஸ் தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வில், தேசிய காங்கிரஸ் கட்சியின் தேசிய தலைவர், முன்னாள் அமைச்சர் மற்றும் அக்கரைப்பற்று மாநகர சபையின் மேயர் ஏ.எல்.எம். அதாஉல்லாஹ், மின்மினி மின்ஹாவுக்கு பதக்கம் அணிவித்து ‘Best Young Journalist Award – 2026’ விருதை வழங்கி கௌரவித்தார்.
இளவயதிலேயே ஊடகத்துறையில் செய்திச் சேவையாற்றி வருவதுடன், சுற்றுச்சூழல் பாதுகாப்பு மற்றும் சமூக விழிப்புணர்வு நடவடிக்கைகளில் அவர் மேற்கொண்டு வரும் பணிகளைப் பாராட்டும் வகையில் இந்த விருது வழங்கப்பட்டதாக தெரிவிக்கப்பட்டது.
நிகழ்வில் முன்னாள் இராஜாங்க அமைச்சரும், SLMC தேசிய இளைஞர் காங்கிரஸ் அமைப்பாளரும், பொத்துவில் பிரதேச சபைத் தவிசாளரும், சிரேஷ்ட ஊடகவியலாளருமான சட்டத்தரணி எஸ்.எம்.எம். முஷாரப் முதுநபீன் கௌரவ அதிதியாக கலந்து கொண்டார்.
மேலும், அட்டாளைச்சேனை பிரதேச சபைத் தவிசாளர் ஏ.எஸ்.எம். உவைஸ், அக்கரைப்பற்று மாநகர சபை உறுப்பினரும் ACMC அமைப்பாளருமான சமூக சேவகர் எஸ்.எம். சபீஸ், பிரதேச சபை உறுப்பினரும் சிரேஷ்ட ஊடகவியலாளருமான ஐ.ஏ. ஸிறாஜ், இறக்காமம் பிரதேச சபை உறுப்பினர் ஆஷிக் உள்ளிட்ட பலரும் கலந்து கொண்டனர்.
இதன்போது பிரதேச சபைகளின் முன்னாள் தவிசாளர்கள், உறுப்பினர்கள், வைத்தியர்கள், கல்வியாளர்கள், அதிபர்கள், ஆசிரியர்கள், புத்திஜீவிகள், ஊடக அமைப்புகளின் பிரதிநிதிகள், தமிழ் லெட்டர் இணையத்தள உறுப்பினர்கள், ஊடகவியலாளர்கள் மற்றும் அழைக்கப்பட்ட அதிதிகள் எனப் பலரும் கலந்துகொண்டனர்.
தமிழ் லெட்டர் இணையத்தளத்தின் 10ஆவது வருட பூர்த்தியை முன்னிட்டு பல்வேறு துறைகளில் சிறப்பாகப் பணியாற்றி வரும் 20 முக்கியஸ்தர்களும் இந்நிகழ்வில் கௌரவிக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.







