கந்தசாமி பிரபு MP இன் முயற்சியில் கிழக்கு பல்கலைக்கழக மாணவர்களின் நீண்டகால விடுதி பிரச்சனைக்கு தீர்வு; உயர் கல்வி அமைச்சின் ஊடாக பிரதமரால் 515 மில்லியன் ஒதுக்கீடு
வந்தாறுமூலை கிழக்கு பல்கலைக்கழக வளாகத்தில் கல்வி கற்கும் வெளிப்பிரதேச மாணவர்களுக்கு தங்கி இருந்து கற்றல் நடவடிக்கைகளை மேற்கொள்ள போதுமான விடுதி வசதிகள் இன்மையால் மாணவர்கள் அருகில் உள்ள தனியார் தங்கும் இடங்களை பணம் கொடுத்து தங்கி இருந்து மிகுந்த சிரமங்களை அனுபவித்தவர்களாக கற்றல் நடவடிக்கைகளில் ஈடுபட்டு வந்தனர் –
மாணவர்களின் இந்த அவல நிலை தொடர்பில் தேசிய மக்கள் சக்தியின் மட்டக்களப்பு மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினரும் பிரதேச ஒருங்கிணைப்பு குழு தலைவருமான கந்தசாமி பிரபு அவர்கள் பிரதமரும், கல்வி மற்றும் உயர்கல்வி அமைச்சருமான ஹரிணி அமரசூரிய அவர்களின் கவனத்திக்கு கொண்டு சென்று விடுதி ஒன்று அமைப்பதன் அவசியம் குறித்து வேண்டிக்கொண்டு முயற்சிகளை முன்னெடுத்ததன் ஊடாக தற்போது சுமார் 515 மில்லியன் ரூபாய் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டு உள்ளது.
இதன் மூலம் ஒவ்வொரு அறைகளும் தலா 2 மாணவர்கள் தங்கும் வகையில் மொத்தமாக 200 அறைகளை கொண்டு அமைய உள்ளதுடன் 400 மாணவர்கள் இதனூடாக நேரடி பயனடையும் வகையில் குறித்த விடுதி கட்டடம் விரைவில் அமைக்கப்பட உள்ளதாகவும், தூரப்பிரதேச மாணவர்களுக்கு பெரும் ஆறுதலாக இது அமையும் என்றும் இதற்கான ஆரம்பகட்ட செயற்பாடுகளை கிழக்கு பல்கலைக்கழக நிருவாகம் துரிதமாக மேற்கொண்டு வருவதாக பாராளுமன்ற உறுப்பினர் கந்தசாமி பிரபு தெரிவித்தார்.
