இராணுவத்தின் ஏற்பாட்டில் “Beach Clean Up” கல்முனை கடற்கரையில் மாபெரும் சிரமதானம்

பாறுக் ஷிஹான்

கல்முனை மாநகர பிரதேசங்களில் ‘அழகான கடற்கரை’ செயற்றிட்டம் Clean srilanka  வேலைத்திட்டத்தின் ஊடாக  வெற்றிகரமாக முன்னெடுக்கப்பட்டது.

ஜனாதிபதி செயலகத்தின் “கிளீன் சிறிலங்கா” திட்டத்தின் ஓர் அங்கமாக “அழகான கடற்கரை” எனும் செயற்றிட்டத்தின் கீழ் கல்முனை மாநகர சபைக்குட்பட்ட கடற்கரை பிரதேசங்களை சிரமதானம் மூலம் துப்பரவு செய்யும் விசேட வேலைத் திட்டம் இலங்கை இராணுவத்தின்  18வது விஜயபாகு காலாட்படையணி  ஏற்பாட்டில்  செவ்வாய்க்கிழமை(29)  முற்பகல் 7 மணி முதல் நண்பகல் 12 மணி வரை இடம்பெற்றது.


“கழிவுகளற்ற கடற்கரை” எனும் தொனிப்பொருளில் இராணுவத்தினரின் முழு ஏற்பாட்டில் இடம்பெற்ற  இச்சிரமதானப்பணியில் பிரதேச பொது அமைப்புக்கள், விளையாட்டுக்கழகங்கள். இளைஞர் கழகங்கள், சமூக நிறுவனங்கள் மற்றும் தன்னார்வலர்கள்  என பலரும் கலந்து கொண்டனர்.

 18வது விஜயபாகு காலாட்படையணி வழிநடத்தலில் கல்முனை  பிரதேச செயலகம் கல்முனை மாநகர  சபை பங்களிப்புடன் கல்முனை மாநகர சபைக்குட்பட்ட பாண்டிருப்பு கல்மனை வடக்கு தெற்கு சுகாதார வைத்திய அதிகாரி பணிமனைக்குட்பட்ட    பகுதிக்கான  தூய்மைப்படுத்தும் வேலைத்திட்டம்  முன்னெடுக்கப்பட்டிருந்தன.மாநகர சபையின் திண்மக் கழிவகற்றல் வாகனங்களும் கனரக இயந்திரங்களும் முழுமையாக பயன்படுத்தப்பட்டிருந்தன.
 
இந்நிகழ்வில் 18வது விஜயபாகு  காலாற்படைப்பிரிவின் அதிகாரிகள் மற்றும்  சுகாதார உத்தியோகத்தர்கள் பொதுமக்கள் என பலரும் இவ் தூய்மைப்படுத்தல் நிகழ்வில் கலந்து கொண்டமை குறிப்பிடத்தக்கதாகும்.அத்துடன் பொலிஸார், முப்படையினர் மற்றும் சிவில் அமைப்பினரும் இதில் பங்குபற்றி ஒத்துழைப்பு வழங்கியிருந்தனர்.