கல்முனை நகர லயன்ஸ் கழகத்தின் 27வது நிருவாகம் தெரிவு!
( வி.ரி.சகாதேவராஜா)
கல்முனை நகர லயன்ஸ் கழகத்தின் 27 வது தலைவராக, கிழக்கு மாகாண உதவி பிராந்திய முகாமையாளர்( LOLC – Finance) லயன் ஏ.எல்.மொகமட் பாயிஸ் பதவிப்பிரமாணம் செய்துள்ளார்.
இப் பதவியேற்பு வைபவம் கல்முனை கிறீன் பார்க் விடுதியில் 26வது தலைவர் லயன் கே.இதயராஜா தலைமையில் நேற்று முன்தினம் (19) சனிக்கிழமை நடைபெற்றது.
இவ் வைபவத்திற்கு பிரதம அதிதியாக லயன்ஸ் கழகத்தின் மாவட்ட முதல் உதவி ஆளுநர் லயன் ஜி.ஷாகிர் அகமட் கலந்துகொண்டு சிறப்பித்தார்.
கௌரவ அதிதிகளாக லயன்ஸ் கழக வலயத்தலைவர் லயன் எம்ஐஎம்.ஷியாட், சம்மாந்துறை வலய ஓய்வு நிலை உதவிக் கல்விப் பணிப்பாளர் வி.ரி.சகாதேவராஜா ஆகியோர் கலந்து கொண்டனர்.
மங்கலவிளக்கேற்றியதை தொடர்ந்து சம்பிரதாயபூர்வமாக புதிய தலைவர் லயன் ஏஎல்எம்.பாயிஸ் 26வது தலைவர் லயன் கே. இதயராஜாவிடமிருந்து தலைவருக்கான மாலை முதல் ஆவணங்களை மேடையில்வைத்து பெற்றுக்கொண்டார்.
புதிய தலைவர் ஏஎல்எம்.பாயிஸ், புதிய செயலாளர் லயன் எஸ்.தைரியராஜா, பொருளாளர் லயன் எம்.சுதர்சன் ஆகியோர் உதவி ஆளுநரால் பரிசு வழங்கப்பட்டு பாராட்டப்பட்டார்கள்.
இவ்வாண்டுக்கான புதிய நிருவாகசபை லயன்களை ஆளுநர் ஷாகிர் பதவிப்பிரமாணம் செய்து வைத்தார்.
வாழ்த்துப்பகரும் நிகழ்வில் வித்தகர் விபுலமாமணி வி.ரி.சகாதேவராஜா, நிந்தவூர் லயன்ஸ் கழக தலைவர் லயன் மொகமட் ஷாகிர் ஆகியோர் வாழ்த்துக்களை தெரிவித்து உரையாற்றினர். புதிய செயலாளர் லயன் எஸ்.தைரியராஜா நன்றியுரையாற்றினார்.









