தேசிய விபத்துத் தடுப்பு வாரத்தினை முன்னிட்டு கல்முனையில் விழிப்புணர்வு நிகழ்வு
பாறுக் ஷிஹான்
தேசிய விபத்துத் தடுப்பு வாரத்தினை முன்னிட்டு கல்முனை பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் வைத்திய கலாநிதி திருமதி சகீலா இஸ்ஸடீன் அவர்களின் ஆலோசனை மற்றும் வழிகாட்டலின் கீழ் கல்முனை பிராந்தியத்தில் பல்வேறு விழிப்புணர்வு வேலைத்திட்டங்கள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.
பிராந்திய தொற்றா நோய் தடுப்பு பிரிவின் பொறுப்பு வைத்திய அதிகாரி டொக்டர் எம்.ஐ.எம்.எஸ்.இர்ஷாட் தலைமையில் கல்முனை நகர பகுதியில் விழிப்புணர்வு நிகழ்வொன்று இடம்பெற்றது.
பிராந்திய தொற்றா நோய் தடுப்பு பிரிவு, கல்முனை தலைமையக பொலிஸ் நிலையம் மற்றும் கல்முனை சுகாதார வைத்திய அதிகாரி அலுவலகங்கள் இணைந்து குறித்த விழிப்புணர்வு நடவடிக்கையை முன்னெடுத்திருந்தன.
இதன்போது, சுகாதார உத்தியோகத்தர்களும் பொலிஸ் அதிகாரிகளும் இணைந்து, அதிவேகமாக செலுத்தப்பட்ட வாகனங்கள், வீதிப்போக்குவரத்து சட்டங்களை மீறியவர்கள், வாகன ஓட்டும் போது கைபேசியைப் பயன்படுத்தியவர்களைத் தடுத்து நிறுத்தி, அவர்களுக்கு போக்குவரத்து விதிமுறைகள் தொடர்பாகவும் விளக்கமளித்ததுடன் வீதி விபத்துக்களை தடுப்பதற்கான அறிவுரைகளையும் வழங்கினர்.









