கொழும்பு மாநகரசபை தேசிய மக்கள் சக்தி வசம்; மேயராக வ்ராய் கெலி பல்தசார் தெரிவு !
கொழும்பு மாநகர சபையின் மேயரை தெரிவு செய்வதற்கான இரகசிய வாக்களிப்பு நிறைவு பெற்று . முடிவு வெளியிடப்பட்டுள்ளது. கொழும்பு மாநகரசபையின் மேயராக தேசிய மக்கள் சக்தி சார்பாக முன்மொழியப்பட்ட வ்ராய் கெலி பல்தசார் இரகசிய வாக்கெடுப்பில் 61 வாக்குகளால் தெரிவுசெய்யப்பட்டுள்ளார்.
பிரதி மேயராக தேசிய மக்கள் சக்தியின் ஹேமந்த குமார தெரிவுசெய்யப்பட்டுள்ளார்.
கொழும்பு மாநகரசபை மேயரை தெரிவுசெய்வதற்கான இரகசிய வாக்கெடுப்பு மேல்மாகாண உள்ளுராட்சி சபை ஆணையாளர் முன்னிலையில் நடத்தப்பட்டது.
கொழும்பு மாநகர சபையின் மேயர் பதவிக்கு தேசிய மக்கள் சக்தியின் சார்பாக வ்ராய் கெலி பல்தசார் முன்மொழியப்பட்டதுடன், ஐக்கிய மக்கள் சக்தியின் சார்பாக முகமது ரிசா சாருக் முன்மொழியப்பட்டார்.
எதிர்ப்புக்கு மத்தியில் இரகசிய வாக்கெடுப்பு நடத்த தீர்மானிக்கப்பட்டது.இதில் கெலி பல்தசார் 61 வாக்குகளையும் ரிசா சரூக் 54 வாக்குகளையும் பெற்றனர்.
நடந்து முடிந்த உள்ளுராட்சி மன்றத் தேர்தலில் கொழும்பு மாநகர சபையில் 117 உறுப்பினர்கள் உள்ளனர்.
உள்ளூராட்சித் தேர்தல் முடிவுகளின்படி, தேசிய மக்கள் சக்தி 48 இடங்களையும், ஐக்கிய மக்கள் சக்தி 29 இடங்களையும், ஐக்கிய தேசியக் கட்சி 13 இடங்களையும், பொதுஜன பெரமுன 5 இடங்களையும் வென்றிருந்தன.
ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் 4 இடங்களையும், சுயேட்சைக் குழு எண் 03 – மூன்று இடங்களையும், சர்வஜன அதிகாரம் இரண்டு இடங்களையும், ஐக்கிய சமாதான கூட்டணி இரண்டு இடங்களையும் பெற்றன.
சுயேட்சைக் குழு எண் 04 மற்றும் 05 தலா இரண்டு இடங்களைக் கைப்பற்றியிருந்தன.
மேலும், ஐக்கிய குடியரசு முன்னணி, தேசிய மக்கள் கட்சி, தேசிய சுதந்திர முன்னணி, பொதுஜன ஐக்கிய முன்னணி, ஜனநாயக தேசிய கூட்டணி, சுயேச்சைக் குழு எண் 01 மற்றும் சுயேட்சைக் குழு எண் 02 ஆகியவை தலா ஒரு இடத்தைப் பெற்றன.
இருப்பினும், 117 இடங்களைக் கொண்ட கொழும்பு மாநகர சபையின் அதிகாரத்தை நிலைநாட்ட, ஒரு கட்சி குறைந்தது 59 இடங்களைப் பெற வேண்டும்.
இதனடிப்படையில், கொழும்பு மாநகர சபையின் அதிகாரத்தை உருவாக்குவது தொடர்பாகப் பிரதான கட்சிகளுக்கிடையே சமீபத்திய நாட்களில் கடும் போட்டி நிலவி வருகிறது இந்தநிலையிலேயே, இன்று கொழும்பு மாநகர சபையின் முதல்வரைத் தேர்ந்தெடுப்பதற்கான தேர்தல் நடைபெறவுள்ளது.