தென்கிழக்குப் பல்கலைக்கழகத்தின் 18ஆவது பட்டமளிப்பு விழா ஒலுவிலில் இன்று கோலாகல ஆரம்பம்!

பாறுக் ஷிஹான்

இலங்கை தென்கிழக்குப் பல்கலைக்கழகத்தின் 18ஆவது பொதுப் பட்டமளிப்பு விழா, பல்கலைக்கழகத்தின் முதன்மை வளாகத்தில் அமைந்துள்ள கேட்போர்கூடத்தில் இன்று சனிக்கிழமை மிகக் கோலாகலமாக ஆரம்பமாகியது.

பல்கலைக்கழகத்தின் வேந்தர் தலைமையில் நடைபெற்றுவரும் இந்நிகழ்வில், துணைவேந்தர், பீடாதிபதிகள், பேராசிரியர்கள், விரிவுரையாளர்கள் மற்றும் பல்கலைக்கழகப் பணியாளர்கள் பலர் கலந்துகொண்டு சிறப்பித்து வருகின்றனர்.

இளமானி மற்றும் முதுமானி பட்டங்கள் வழங்கல்

இன்றைய பட்டமளிப்பு விழாவில் கலை, கலாசாரம், மேலாண்மை, வர்த்தகம், பொறியியல், பயன்பாட்டு அறிவியல் மற்றும் இஸ்லாமியக் கற்கைகள் உள்ளிட்ட பல்வேறு பீடங்களைச் சேர்ந்த ஆயிரக்கணக்கான மாணவர்களுக்கு இளமானி (Undergraduate), முதுமானி (Postgraduate) மற்றும் கலாநிதி பட்டங்கள் அதிகாரப்பூர்வமாகச் சான்றிதழ்களுடன் வழங்கி கௌரவிக்கப்பட்டு வருகின்றன.

பெற்றோர் மகிழ்ச்சி வெள்ளம்

பட்டமளிப்பு விழாவைக் முன்னிட்டு பல்கலைக்கழக வளாகம் முழுவதும் விழாக் கோலம் பூண்டுள்ளது. பட்டம் பெறும் மாணவர்களின் பெற்றோர்கள், உறவினர்கள் மற்றும் நண்பர்கள் எனப் பெருந்திரளானோர் நிகழ்வில் பங்கேற்றுத் தமது மகிழ்ச்சியைப் பகிர்ந்து கொண்டு வருகின்றனர்.

பாதுகாப்பு மற்றும் போக்குவரத்து ஏற்பாடுகள் பல்கலைக்கழக நிர்வாகத்தினால் சீரான முறையில் முன்னெடுக்கப்பட்டுள்ளன.