அம்பாறை மாவட்டத்தில் சமையல் எரிவாயுக்கள் தட்டுப்பாடு – நுகர்வோர் பெரும் சிரமம்
பாறுக் ஷிஹான்-
நாடளாவிய ரீதியில் மீண்டும் பாரிய சமையல் எரிவாயு தட்டுப்பாடு நிலவுகிறமையினால் அம்பாறை மாவட்டத்தில் அதன் தாக்கத்தை அவதானிக்க முடிகின்றது.
கடந்த 4 நாட்களுக்கு மேலாக அம்மாவட்டத்தில் உள்ள பல்வேறு விற்பனை முகவர்களிடம் இருந்து எரிவாயு சிலிண்டர்களை நுகர்வோர்கள் பெற முடியாமல் சிரமப்படுவதை காண முடிகின்றது.
மேலும் எந்தவொரு சமயல் எரிவாயு சிலிண்டர்களும் சில தினங்கள் விநியோகப்படாமையினால் பல பகுதிகளிலும் சமயல் எரிவாயு தட்டுப்பாடு உணரப்பட்டுள்ளது.
இதற்கமைய அம்பாறை மாவட்டத்தில் லாஃப் மற்றும் லிட்ரோ சமையல் எரிவாயுவிற்கு தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது.தொடர்ந்து இரண்டு மூன்று நாட்களாக அட்டாளைச்சேனை, அக்கரைப்பற்று, நிந்தவூர்,காரைதீவு,மாவடிப்பள்ளி, சாய்ந்தமருது, பாண்டிருப்பு, கல்முனை, நாவிதன்வெளி, மருதமுனை,பெரியநீலாவணை பிரதேசங்களில் வர்த்தக நிலையங்களின் முன்பாக மணிக்கணக்கில் காத்திருந்து பொதுமக்கள் சமையல் எரிவாயுவை பெற்றுச் செல்கின்றனர்.
அதிலும் எதிர்வரும் நாட்களில் எரிவாயு தட்டுப்பாடு நிலவும் என பொதுமக்கள் தேவையற்ற விதத்தில் பீதியடைந்து சிலிண்டர்களைக் கொள்வனவு செய்ய நீண்ட நேரம் காத்திருந்து பெற்றுச் செலகின்றனர்.
இவ்வாறு காத்திருந்து எரிவாயு சிலிண்டர் கிடைக்காமல் ஏமாற்றத்துடன் வீடு திரும்பும் நிலையும் தற்போது நிலவுகிறது .விநியோகம் குறைவாக இருப்பதாலும் தேவை அதிகமாக இருப்பதாலும் மக்கள் பெரும் சிரமத்திற்கு உள்ளாகின்றனர். இது அத்தியாவசியத் தேவைகளைப் பூர்த்தி செய்வதில் பெரும் ஏமாற்றத்தை ஏற்படுத்துகிறது என வர்த்தகர்கள் கூறுகின்றனர்.
குறிப்பாக கடந்த சில தினங்களில் இருந்து இந்த தட்டுப்பாட்டு நிலமை காணப்படுவதுடன் நகரத்தில் உள்ள அநேகமான விற்பனை நிலையங்களில் எரிவாயு சிலிண்டர்கள் முற்றாக தீர்ந்துள்ளது.நிறுவனத்தில் இருந்து வருகின்ற லொறிகள் வரவில்லை என விற்பனையாளர்கள் தெரிவித்துள்ளதுடன் ஒரு சில நாட்களில் அது சீராகும் என தெரிவிக்கின்றனர்.
அம்பாறை மாவட்டத்தில் வழமையை விடக் குறைவான அளவு சிலிண்டர்களே விநியோகிக்கப்படுவதாக விநியோகஸ்தர்கள் கூறுகிறார்கள் இன்னும் சில இடங்களில் விநியோகம் தாமதம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.மேலும் சில பகுதிகளில் இன்னும் விநியோகிக்கப்படாமல் முடங்கியுள்ளதாகத் தெரியவருகிறது இரண்டு வகை சமையல் எரிவாயுகளில் ஒன்றை கூட கொள்வனவு செய்ய முடியாது நுகர்வோரும் பெரும் சிரமங்களுக்கு உள்ளாகியுள்ளனர்.
சில வர்த்தக நிலையங்களில் 12.5 கிலோ கிராம் லிட்ரோ எரிவாயு சிலிண்டர் முடிவடைந்துள்ளதாக தெரிவிக்கப்பட்ட போதிலும் 05 கிலோ கிராம் சிலிண்டர் 02.3 கிலோ கிராம் சிலிண்டர் கையிருப்பில் இருப்பதாக வர்த்தகர்கள் குறிப்பிட்டுள்ளனர்.
இது தவிர லிட்ரோ நிறுவனம் ஏற்கனவே 3 இலட்சம் எரிவாயு சிலிண்டர்களை சந்தைக்கு விநியோகிக்க நடவடிக்கை எடுத்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதற்கிடையில் நாட்டின் பல பகுதிகளில் தொடர்ந்தும் எரிவாயு பற்றாக்குறை நிலவுவதால் மக்கள் அவதிப்பட்டு வருகின்ற நிலையில் நாட்டில் நிலவும் எரிவாயு பற்றாக்குறை காரணமாக 3900 மெட்ரிக் தொன் லிட்ரோ எரிவாயுவுடனான கப்பல் ஒன்று கடந்த செவ்வாய்க்கிழமை (23) நாட்டை வந்தடைந்துள்ளதாக தகவல் ஒன்று வெளியாகியுள்ளது.
மேலும் இன்று (25) மற்றும் 28 ஆம் திகதி 7600 மெட்ரிக் தொன் எரிவாயுவை ஏற்றிக்கொண்டு இரண்டு கப்பல்கள் நாட்டுக்கு வரவுள்ளதாக மற்றுமொரு தகவலும் வெளியாகியுள்ளது.
எனவே கடந்த சில நாட்களாக லிற்ரோ, லாஃப் இரு சமையல் எரிவாயு சிலிண்டர்களுக்கு தட்டுப்பாடு நிலவி வருகின்ற நிலையில் நோன்பு காலத்தில் பொதுமக்களுக்கு அசௌகரியங்கள் ஏற்படாமல் சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என வேண்டுகோள் விடுக்கப்பட்டுள்ளது.
