கல்முனை  பகுதியில்  மேற்கொண்ட திடீர் சோதனை-50 க்கும் மேற்பட்டோருக்கு  சட்ட நடவடிக்கை எடுப்பு

(பாறுக் ஷிஹான்)


சட்டவிரோத போதைப்பொருட்கள்  கடத்தல்கள்  மற்றும் சட்டத்தை நிலைநாட்டும் முகமாகவும் கிளின் சிறிலங்கா வேலைத் திட்டத்தின் கீழ் அம்பாறை மாவட்டம் கல்முனை   பிராந்தியத்தில்     பொலிஸாரின்    விசேட  திடீர் சோதனை நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு  50  பேருக்கு சட்ட நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

இச்சோதனை நடவடிக்கையானது  திங்கட்கிழமை(9) இரவு  கல்முனை பிரதான பேரூந்து நிலையத்தின் முன்பாக  கிழக்கு மாகாண  சிரேஸ்ட பிரதி பொலிஸ் மா அதிபர் சட்டத்தரணி வருண ஜெயசுந்தர  ஆலோசனையில்  அம்பாறை  மாவட்ட பிரதிப் பொலிஸ் மா அதிபர்  சுஜித் வெதமுல்ல வழிகாட்டலில்  அம்பாறை மாவட்ட  சிரேஸ்ட பொலிஸ் அத்தியட்சகர்  பிரியந்த பண்டார கஸ்தூரி ஆராய்ச்சி  நெறிப்படுத்தலில்  அம்பாரை மாவட்ட  கல்முனை பிராந்திய உதவி பொலிஸ் அத்தியட்சகர் எம்.கே.இப்னு அஸார் பணிப்புரைக்கமைய  மேற்கொள்ளப்பட்டது.

இத் திடீர் சோதனை நடவடிக்கையில்      கல்முனை ,  சவளைக்கடை  பொலிஸ் நிலைய    பொலிஸார்   இணைந்து  கொண்டதுடன்  சவளக்கடை  பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி  , கல்முனை தலைமையக பொலிஸ் நிலைய  மோட்டார் போக்குவரத்து பிரிவு பொறுப்பதிகாரி   ஆகியோர் பங்கேற்றிருந்தனர்.

குறிப்பாக இச்சோதனை நடவடிக்கையின் போது  மோட்டார் சைக்கிள்கள் உட்பட கனரக வாகனங்கள் கட்டங் கட்டமாக பொலிஸாரினால் இடைமறிக்கப்பட்டு பரிசோதனை செய்யப்பட்டன.அத்துடன்  வீதி ஒழுங்குமுறை தொடர்பான ஆலோசனைகள்  பொலிஸாரினால் வழங்கப்பட்டன.

மேலும் இரவில் பயணம் மேற்கொள்ளும் கல்முனை கொழும்பு குளீருட்டப்பட்ட பேரூந்துகளின் வழித்தடை பரிசோதனை குறித்த பேரூந்தில் சோதனை  என்பன முன்னெடுக்கப்பட்டன.

அத்துடன்  மோட்டார் சைக்கிள் ஆவணம்  காப்புறுதி எதுவும் இன்றி மோட்டார் சைக்கிளை செலுத்துவது,  சாரதி அனுமதிப்பத்திரமின்றி வாகனம் செலுத்துவது,   தலைக்கவசம் அணியாது செல்வது   ,  ஒரு மோட்டார் சைக்கிளில் இருவருக்கு மேற்பட்டவர்கள் பயணிப்பது,   அதிவேகமாக செல்வது  மிக ஒலி எழுப்பிய மோட்டார் சைக்கிள்கள்  தொடர்பில் கண்காணிக்கப்பட்டு தண்டப்பணம் விதிக்கப்பட்டன.

இதே வேளை   பொதுப்போக்குவரத்து சட்டங்களை மீறும்  நபர்கள் சட்ட விரோத கடத்தல்களுக்கு துணை நிற்கும் நபர்களுக்கு  எதிராக கடுமையான சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என   பொலிஸார் தெரிவித்துள்ளனர்.