ஊடகவியலாளர் வீ.கே.ரவீந்திரனுக்கு கலாபூஷணம் விருது.
செல்லையா-பேரின்பராசா .
புத்தசாசன, சமய மற்றும் கலாசார அலுவல்கள் அமைச்சின் 40 ஆவது அரச விருது விழாவில் மட்டக்களப்பு பெரியகல்லாற்றைச் சேர்ந்த மூத்த எழுத்தாளரும், சிரேஸ்ட ஊடகவியலாளருமான வீ.கே.ரவீந்திரன் ( ரவிப்பிரியா) அரச உயர் விருதான கலாபூஷணம் விருது வழங்கி கௌரவிக்கப்பட்டுள்ளார்.
அறுபத்து ஐந்து ( 65 ) வருட காலமாக சிறுகதை, நாவல், நாடகம், நிகழ்ச்சித் தொகுப்பு போன்ற துறைகளில் ஈடுபாடு காட்டிவரும் இவர் மூன்று நாவல்களையும், ஒரு சிறுகதை தொகுதியையும் வெளியிட்டதுடன், இலங்கை வானொலியில் தொடர் நாடகத்தை (25 வாரங்கள்) ஒலிபரப்பாக எழுதியுள்ளார்.
கல்லாறு ” றோசாலயா ” அமைப்பின் நிறுவுனரான இவர் இவ் அமைப்பினூடாக கல்வி, சமூக மேம்பாடு, கலை கலாசார பணிகளை அரை நூற்றாண்டு காலமாக முன்னெடுத்துவரும் சமூக செயற்பாட்டாளர்.
மேலும் வீரகேசரி, தினகரன் மற்றும் இணையத்தளங்களில் பிராந்திய செய்தியாளராகப் பணியாற்றும் இவர் முன்னணி கூட்டுறவாளருமாவார்.



