(செல்வி வினாயகமூர்த்தி)
ராமகிருஷ்ண மிஷனின் நூற்றாண்டு விழாவை முன்னிட்டு, திருக்கோவில் கல்வி வலயத்திற்குட்பட்ட பாடசாலைகளிலிருந்து இடைவிலகிய மாணவர்கள் மற்றும் இடையிடையே பாடசாலைக்கு வருகைதரும் தரம் 10, 11 மாணவர்களுக்கான ஒருநாள் கல்வி வலுப்படுத்தல் பயிற்சி நிகழ்ச்சி நாளை (02.08.2026) காலை 8.00 மணிக்கு அக்கரைப்பற்று இந்து இளைஞர் மன்ற கேட்போர் கூட மண்டபத்தில் நடைபெறவுள்ளது.
இந்நிகழ்ச்சிக்காக தெரிவு செய்யப்பட்ட 120 மாணவர்கள் பங்கேற்கவுள்ளதுடன், அவர்களிடம் கல்வி மீதான ஆர்வத்தை மீளக் கட்டியெழுப்பவும், எதிர்காலக் கல்விப் பயணத்தில் தன்னம்பிக்கையுடன் முன்னேற ஊக்கமளிக்கவும் சிறப்பு வழிகாட்டல் அமர்வுகள் இடம்பெறவுள்ளன.
இந்தியாவில் இருந்து வருகை தரும் சுவாமிஜீகள் நேரடியாக பயிற்சிகளை வழங்கி, மாணவர்களுடன் கலந்துரையாடவுள்ளனர்.
அக்கரைப்பற்று இந்து இளைஞர் மன்றத்தின் ஏற்பாட்டிலும், ராமகிருஷ்ண மிஷனின் அனுசரணையிலும் நடைபெறும் இந்நிகழ்ச்சி, பாடசாலை கல்வியிலிருந்து இடைவிலகும் மாணவர்களின் எண்ணிக்கையை தடுக்கவும், மாணவர்களின் தனிப்பட்ட ஆளுமை, ஒழுக்கம், இலக்கு நிர்ணயம் மற்றும் கல்வி முன்னேற்றம் தொடர்பான விழிப்புணர்வை மேம்படுத்தவும் நோக்கமாகக் கொண்டுள்ளது.
ராமகிருஷ்ண மிஷனின் நூற்றாண்டு விழாவை முன்னிட்டு கல்வி, சமூக மற்றும் ஆன்மிகப் நிகழ்வுகளை மையப்படுத்திய பல்வேறு நிகழ்வுகளும் தொடர்ச்சியாக ஒழுங்குபடுத்தப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.



