மலையகத்திற்கான ஒஸ்காரின் பேரிடர் நிவாரண உதவி வெற்றி!
( வி.ரி .சகாதேவராஜா)
அவுஸ்திரேலிய காரைதீவு மக்கள் ஒன்றியம்( ஒஸ்கார்- Auskar) , இலங்கையில் தித்வா பேரிடரால் கடுமையாக பாதிக்கப்பட்ட மலையக மக்களுக்கு ஒரு பெரும் தொகுதி பேரிடர் நிவாரணங்களை வழங்கி வைத்தது.
இந்நிவாரணங்கள் மஹியங்கனை, கண்டி, கந்தான, சரசவிகம, கம்பளை, பூண்டுலோயா ,பதுளை, பசறை ,மடுல்சீம, பட்டவத்தை,வேவத்த போன்ற இடங்களில் உள்ள மூவின மக்களுக்கும் வெற்றிகரமாக வழங்கி வைக்கப்பட்டன.
ஒஸ்காரின் உறுப்பினர்களான காரைதீவு மக்கள் இதற்காக பூரண அனுசரணையை வழங்கியிருந்தனர்.
ஒஸ்கார் தலைவர் கந்தசாமி பத்மநாதன் தலைமையிலான குழுவினரின் பூரண ஒத்துழைப்பில் பேரிடர் நிவாரண திட்டம் முதற்கட்டமாக பொலனறுவை கல்எல கிராமத்திற்கு வழங்கி வைக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.
ஒஸ்கார் அமைப்பின் வேண்டுகோளுக்கு இணங்க ஓய்வு நிலை உதவிக் கல்விப்பணிப்பாளர் வி.ரி. சகாதேவராஜா தலைமையிலான குழுவினர் மலையகம் சென்று அவற்றை வழங்கி வைத்தனர்.
ஒஸ்கார் சார்பில் வி.ஜெயச்சந்திரன், வி.தஸானந்த், என். அமரீசன் மற்றும் ஓய்வு நிலை அதிபர் பூ.நவரெத்தினராஜா ஆகியோர் தொண்டர்களாக கலந்து கொண்டனர்.
அதற்காக அங்குள்ள மக்கள், காரைதீவு மக்களுக்கு நன்றி கூறினர்.
இதனை ஒஸ்கார் அமைப்பின் சமூக சேவைக்கான பிரதம இணைப்பாளர் பொருளாளர் வீ. விவேகானந்தமூர்த்தி மற்றும் செயலாளர் தி.லாவண்யன் ஆகியோர் அவுஸ்திரேலியாவிலிருந்து நிதிஒழுங்கமைப்பு செய்திருந்தமை குறிப்பிடத்தக்கது.








