தேசிய ஓவியப் போட்டியில் துறைநீலாவணை மகா வித்தியாலயம் முதலிடம்.

தேசிய சிறுவர் பாதுகாப்பு அதிகார சபையினால் அகில இலங்கை ரீதியில் நடாத்தப்பட்ட சித்துவிலி சித்தம் -2025 ஓவியம், சுவரொட்டி மற்றும் கார்ட்டூன் போட்டியில் தேசிய, மாவட்ட மட்டத்தில் வெற்றி பெற்ற மாணவர்களுக்கு மட்டக்களப்பு மாவட்ட அரசாங்க அதிபர் ஜே.எஸ். அருள்ராஜ் அவர்களின் தலைமையில் உதவி மாவட்ட செயலாளர் ஜீ.பிரணவன் மேற்பார்வையின் கீழ் மாவட்ட சிறுவர் பாதுகாப்பு உத்தியோகத்தர் திருமதி நிஷா றியாஸ் ஒழுங்கமைப்பில் விருதுகள் மற்றும் சான்றிதழ்கள் வழங்கி வைக்கும் நிகழ்வு மட்டக்களப்பு பழைய மாவட்ட செயலக மாநாட்டு மண்டபத்தில் அண்மையில் நடைபெற்றது.

இந்நிகழ்வில் பட்டிருப்பு கல்வி வலயத்திற்குட்பட்ட துறைநீலாவணை மகா வித்தியாலய மாணவர்கள் 07 பேர் தெரிவு செய்யப்பட்டு, மாவட்ட மட்டத்தில் முதலிடம் பெற்று சாதனை படைத்துள்ளனர். இம்மாணவர்கள் தேசிய கலைஞர்.ஏ.ஓ.அனல் அவர்களின் வழிகாட்டலில் இந்த வெற்றியை பெற்றுள்ளனர்.

உலக சிறுவர் தினத்தை முன்னிட்டு தேசிய சிறுவர் பாதுகாப்பு அதிகார சபையினால் “சிறுவர் உரிமைகள் மற்றும் பாதுகாப்பு” எனும் தலைப்பில் ஆண்டு தோறும் சித்துவிலி சித்தம் போட்டிகள் நடாத்தப்பட்டு வருகின்றது.

ஆரம்ப பிரிவு முதல் உயர் தரம் வரையிலான மாணவர்களோடு, பல்கலைக்கழக மாணவர்களும் பங்குபற்றி வெற்றியீட்டிருந்தனர்.

மாணவர்களின் ஆளுமையை விருத்தி செய்யும் முகமாக தேசிய சிறுவர் பாதுகாப்பு அதிகார சபையினால் நடாளாவிய ரீதியில் பல்வேறுபட்ட செயற்திட்டங்கள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கதாகும்.

இந் நிகழ்வில் வலயக்கல்வி பணிப்பாளர்கள், மாவட்ட உள சமூக உத்தியோகத்தர் ஏ. பிரபாகர், அதிபர்கள், ஆசிரியர்கள், வெற்றி பெற்ற மாணவர்களின் பெற்றோர் என பலர் கலந்து கொண்டனர்.

You missed