பாறுக் ஷிஹான்

கிராமிய அபிவிருத்தி சமூகப் பாதுகாப்பு மற்றும் சமூக வலுவூட்டுகை அமைச்சு ஏற்பாட்டில்  பிரஜாசக்தி’ வறுமை ஒழிப்புக்கான தேசிய இயக்கத்தை நடைமுறைப்படுத்தும் வேலைத்திட்டத்திற்கான பிரதிநிதி குழுக்களின் தலைவர்களுக்கான    நியமனம் வழங்கும் நிகழ்வு இன்று(6) கல்முனை பிரதேச செயலக கேட்போர் கூடத்தில் நடைபெற்றது.


இந்நிகழ்வானது கல்முனை பிரதேச செயலாளர் சட்டத்தரணி  ரீ.எம்.எம்.அன்சார் தலைமையில்  திகாமடுல்ல மாவட்டப் பாராளுமன்ற உறுப்பினரும்  அம்பாறை மாவட்ட கரையோரப் பிரதேசங்களின் ஒருங்கிணைப்புக்  குழு தலைவரும் அரசிலமைப்புப் பேரவை உறுப்பினருமான அபூபக்கர் ஆதம்பாவா பிரதம விருந்தினராக கலந்து கொண்டு நியமனங்களை வழங்கி வைத்தார்.

இந்நிகழ்வில்  பிரஜாசக்தி’ வறுமை ஒழிப்புக்கான தேசிய இயக்கத்தை நடைமுறைப்படுத்தும் வேலைத்திட்டத்திற்கான பிரதிநிதி குழுக்களின் தலைவர்களுக்கான நியமனம் வழங்கி வைக்கப்பட்டது.கல்முனை பிரதேச செயலாளர் பிரிவிற்குட்பட்ட  கிராம உத்தியொகத்தர்  29 க்குரிய பிரிவுகளுக்கான  ‘பிரஜாசக்தி’ வறுமை ஒழிப்புக்காக நியமிக்கப்பட்டுள்ள இத்தலைவர்கள் இணைந்த கிராம அபிவிருத்தி திட்டத்தை தயாரித்தல்  நடைமுறைப்படுத்தல் மற்றும் மேற்பார்வைப் பணிகளுக்காக  தொண்டர் அடிப்படையில்  கடமையாற்றுவார்கள்.

இந்நிகழ்வில்  பிரதேச செயலக கணக்காளர்  கே.எம்.எஸ். அமீர் அலி ,பிரதேச செயலக  நிர்வாக உத்தியோகத்தர் ஏ.சி.எம் .பளீல், திட்டமிடல் சிரேஸ்ட உத்தியோகத்தர் எம்.அஸ்ஹர் ஆதம்,  மற்றும் பல அபிவிருத்தி உத்தியோகத்தர்கள் உட்பட காரியாலய உத்தியோகத்தர்கள் கிராம உத்தியோகத்தர்கள் அலுவலக உத்தியோகத்தர்கள் பாராளுமன்ற உறுப்பினரின் செயலாளர்கள் இணைப்பாளர்கள் தேசிய மக்கள் சக்தியின் கல்முனை பிரதேச முக்கியஸ்தர்கள்  என பலரும் கலந்து கொண்டனர்.