பாறுக் ஷிஹான்
சுகாதாரம் மற்றும் தரமிக்க உணவுப் பொருட்களைப் பொதுமக்களுக்கு பெற்றுக்கொடுக்கும் நோக்கில் கல்முனை பிராந்தியத்தில் உள்ள உணவகங்கள், உணவு விற்பனை நிலையங்கள், பழக்கடைகள் என்பவற்றில் திடீர் சோதனைகள் இடம்பெற்று வருகின்றன.
கல்முனை பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் வைத்திய கலாநிதி திருமதி சகீலா இஸ்ஸடீன் ஆலோசனை மற்றும் வழிகாட்டலின் கீழ் சாய்ந்தமருது சுகாதார வைத்திய அதிகாரி பிரிவில் இன்று (26) காலை பொதுச் சுகாதார பரிசோதகர்கள் சோதனை நடவடிக்கையினை முன்னெடுத்தனர்.
இதேவேளை சாய்ந்தமருது கடற்கரை வீதியில் விற்பனைக்காக வைக்கப்பட்டிருந்த மனித நுகர்வுக்கு பொருத்தமற்ற பழுதடைந்த ஒரு தொகை பழங்களும் பொதுச் சுகாதார பரிசோதகர்களினால் கைப்பற்றப்பட்டன.
குறித்த இடத்தில் பழுதடைந்த பழங்கள் விற்பனை செய்யப்படுவதாக பொதுமக்களிடமிருந்து கிடைக்கப்பெற்ற முறைப்பாட்டினையடுத்து, அப்பகுதிக்கு திடீர் விஜயம் மேற்கொண்ட பொதுச் சுகாதார பரிசோதகர்கள் பழுதடைந்த பழங்களைக் கைப்பற்றியதுடன் வியாபாரிக்கு எதிராக சட்ட நடவடிக்கைகளை மேற்கொள்வதற்கான ஒழுங்குகளையும் மேற்கொண்டு வருகின்றனர்.




