காரைதீவு மக்களின் ஆணைக்கு தமிழரசுக் கட்சி மதிப்பளிக்க வேண்டும் -மக்கள் கோரிக்கை.
( வி.ரி. சகாதேவராஜா)
இலங்கை தமிழரசு கட்சிக்கு காரைதீவு மக்கள் அளித்த ஆணையை கட்சி மதிக்க வேண்டும் . மக்களும்,
கட்சியின் பிரதேசக்கிளையும், துணை வேட்பாளர்களும் ஒருமித்த குரலில் தவிசாளராக கி.ஜெயசிறில் வரவேண்டும் என்று ஜனநாயக முறைப்படி பெரும்பான்மை ஆதரவைத் தெரிவித்திருக்கிறார்கள்.
இதனை பழம்பெரும் கட்சியான இலங்கை தமிழரசுக் கட்சி கவனத்தில் கொண்டு செயற்பட வேண்டும் என மக்கள் கோரிக்கை விடுத்துள்ளார்கள்.
அதை விடுத்து, ஏனைய முஸ்லிம் கட்சிகள் கூறுகிறார்கள் என்பதற்காக எங்கள் ஜனநாயகத் தெரிவை மறுதலிக்க கூடாது.
இதைவிட, காரைதீவில் நான்கு வட்டாரங்களையும் இலங்கை தமிழரசுக் கட்சி அமோக வெற்றியீட்டியதற்கு உணர்வுள்ள காரைதீவு தமிழ் மக்களே காரணம் என்பதை கட்சி அறியவேண்டும். கடந்த தேர்தலிலும் வலுவான சுயேச்சை அணியை வென்று ஆட்சியமைத்ததும் தெரிந்ததே.
காரைதீவு பிரதேச சபையில் இலங்கை தமிழரசுக் கட்சி சார்பில் வெற்றி பெற்ற வேட்பாளர்கள் நால்வரும் அந்தந்த வட்டாரங்களில் பெற்ற வாக்குகள் இறங்கு வரிசைப்படி முறையே கி.ஜெயசிறில்- 1101(80%) வை.கோபிகாந்- 980(69.04%) சி.சிவகுமார்- 812(48.02%) சு.பாஸ்கரன்- 786( 70.05%)
ஆகும்.எனவே, நாம் ஜனநாயக வாக்குரிமையால் சரியான தெரிவை வழங்கியிருக்கிறோம்.
அதற்கு மதிப்பளித்து பிரதேச கிளையினதும் தேர்தலில் போட்டியிட்ட துணை வேட்பாளர்களது பரிந்துரைகளையும் மதித்து கட்சி முடிவெடுக்க வேண்டும் வேண்டும் என அவர்கள் கோருகின்றனர்.




