சர்வதேச யோகா தின அம்பாரை மாவட்ட நிகழ்வுகள் ஆலையடிவேம்பு பிரதேச செயலாளர் பிரிவில் எதிர்வரும் 21ஆம் திகதி!
வி.சுகிர்தகுமார்
இந்து சமய கலாசார அலுவல்கள் திணைக்களம் மற்றும் ஆலையடிவேம்பு பிரதேச செயலகம் ஆலையடிவேம்பு கோட்டக்கல்வி அலுவலகம் இணைந்து முன்னெடுக்கவுள்ள சர்வதேச யோகா தின அம்பாரை மாவட்ட நிகழ்வுகள் ஆலையடிவேம்பு பிரதேச செயலாளர் பிரிவில் இவ்வருடம் இடம்பெறுவதற்கான ஏற்பாடுகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.
இதற்கமைவாக சர்வதேச யோகா தின நிகழ்வு ஒழுங்கமைப்பு தொடர்பாக ஆராயும் கூட்டமொன்று ஆலையடிவேம்பு பிரதேச செயலக கலாசார மண்டபத்தில் இன்று (04) இடம்பெற்றது.
ஆலையடிவேம்பு பிரதேச செயலாளர் ஆர்.திரவியராஜ் தலைமையில் அம்பாரை மாவட்ட கலாசார உத்தியோகத்தர் கு.ஜெயராஜி ஒருங்கிணைப்பில் இடம்பெற்ற ஒன்று கூடல் நிகழ்வில் உதவிப்பிரதேச செயலாளர் ஆர்.சுபாகர் ஆலையடிவேம்பு கோட்டக்கல்வி பணிப்பாளர் க.கமலமோனதாசன் பிரதேச செயலக கலாசார உத்தியோகத்தர் சர்மிளா உள்ளிட்ட அதிகாரிகள் அதிபர்கள் ஆலய தலைவர்கள் சமூக அமைப்பின் தலைவர்கள் பிரதிநிதிகள் என பலர் கலந்து கொண்டனர்.
இதன்போது சர்வதேச யோகா தின முக்கியத்துவம் தொடர்பாகவும் நிகழ்வுகளை 2000 ஆயிரம் மாணவர்களை உள்வாங்கி ஆலையடிவேம்பு பிரிவில் சிறப்பாக நடத்துவது தொடர்பாகவும் பிரதேச செயலாளர் எடுத்துரைத்தார்.
தொடர்ந்து யோகா தின ஒழுங்குகள் தொடர்பாகவும் பாடசாலைகள் ஆலயங்கள் சமூக அமைப்புக்கள் வழங்க வேண்டிய ஒத்துழைப்பு பங்களிப்பு தொடர்பிலும் மாவட்ட கலாசார உத்தியோகத்தர் தெளிவு படுத்தினார்.
பாடசாலை மாணவர்களை ஒழுங்கமைத்தல் தொடர்பான விளக்கத்தினை கோட்டக்கல்வி பணிப்பாளர் க.கமலமோனதாசன் எடுத்துரைத்தார்.
மேலும் யோகா தினம் நடைபெறுகின்ற திகதி தொடர்பிலும் இதன்போது ஆராயப்பட்டதுடன் எதிர்வரும் 21ஆம் திகதி; நடத்துவது எனவும் இதற்கான பங்களிப்பை சகலரும் இணைந்து மேற்கொள்வது எனவும் முடிவெடுக்கப்பட்டது.



