பன்றி வளர்ப்பு கைத்தொழிலை மீளக் கட்டியெழுப்புவதற்குத் தேவையான பணிகளை மேற்கொள்வதற்கான செயலணியொன்றை நியமிப்பதற்கு அரசாங்கம் நடவடிக்கை எடுத்துள்ளது. 

விவசாய, கால்நடை வள அமைச்சின் செயலாளர் மற்றும் ஜனாதிபதியின் சிரேஷ்ட மேலதிக செயலாளர் ஒருவரின் இணைத் தலைமையில் இந்த செயலணி நியமிக்கப்படவுள்ளது. 

கடந்த ஆண்டு நாட்டின் பல பகுதிகளில் பரவிய ஆபிரிக்க பன்றிக் காய்ச்சல் காரணமாக 1,594 பன்றிப் பண்ணைகளில் 61,695 பன்றிகள் உயிரிழந்துள்ளதாகத் தரவுகள் தெரிவிக்கின்றன. 

எனினும், நோய்ப் பரவலின் தற்போதைய நிலை மற்றும் நோய் பரவல் தொடர்பான, சரியான விஞ்ஞான ரீதியான தகவல்கள் இன்மை காரணமாகப் பன்றிப் பண்ணைகளை மீண்டும் ஆரம்பிப்பதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது. 

எனவே, குறித்த பணிகளை மேற்கொள்வதற்காக இந்த செயலணியை உருவாக்குவதற்குத் திட்டமிடப்பட்டுள்ளதுடன், அதற்காக அமைச்சரவையின் அனுமதியும் பெறப்பட்டுள்ளது.